திமுகவிடம் இருந்து காங்கிரஸ் விலகாது.. விஜய்யுடன் கூட்டணி அமைக்க தயாரில்லை! பீட்டர் அல்போன்ஸ் பேட்டி
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகாது என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகியான பீட்டர் அல்போன்ஸ் சூசகமாக தெரிவித்துள்ளார். தவெகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பு விரும்புவதாக கூறிய பீட்டர் அல்போன்ஸ், புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய்யை நம்பி கூட்டணிக்கு செல்ல காங்கிரஸ் தயாரில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
விஜய் கட்சி தொடங்கிய முதல் மாநாட்டில் தங்களுடன் கூட்டணி அமைப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இருந்தாலும் இதனை கொள்கையாக வைத்துள்ள விசிக உள்ளிட்ட எந்த கட்சியும் தவெகவுடன் கூட்டணி அமைக்க தயாராக இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி மட்டும் திடீரென ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று பேசத் தொடங்கியது.

விஜய்க்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ் தரப்பு
இதனால் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி, தவெகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கேற்ப காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யுடன் சந்திப்பு நடத்தி இருந்தார். மறுபக்கம் விஜய்க்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட தரப்பினர் பேசத் தொடங்கினர்.
கண்டித்த காங்கிரஸ் தலைமை
ஆனால் காங்கிரஸ் தலைமை கூட்டணி குறித்தும், ஆட்சியில் பங்கு குறித்தும் பேசக் கூடாது என்று கண்டித்த பின் அமைதியாகினர். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக - காங்கிரஸ் கூட்டணி இதுவரை இறுதியாகவில்லை. இந்த நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான பீட்டர் அல்போன்ஸ் பேட்டி அளித்துள்ளார்.
பீட்டர் அல்போன்ஸ் பேட்டி
அதில் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பு விரும்புவது உண்மைதான். ஆனால் அதனை மட்டும் வைத்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்ய முடியாது. ஆனால் காங்கிரஸ் கட்சியினருக்கு நாம் எடுக்கும் முடிவு தமிழ்நாட்டை பாஜகவின் வேட்டைக்காடாக மாற்றிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையும் இருக்கிறது.
காங்கிரஸ் நிலைப்பாடு
ஆட்சியில், அதிகாரத்தில் ஆசைப்படாத கேட்காத கட்சிகள் எப்படி இருக்க முடியும்? அதனை திமுக விட்டுக் கொடுக்குமா என்பது அவர்களின் பிரச்சனை. காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு நிலைப்பாடு இருப்பதில் தவறில்லை. காங்கிரஸ் கட்சிக்கு நிறைய தேவைகள் உள்ளது. அடிமட்ட அளவில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும், இளைஞர்களை இழுக்கும் கட்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறது.
விஜய்யுடன் செல்வீர்களா?
இதனை கூட்டணி கட்சியிடம் தான் கேட்க முடியும். புதிய கட்சியிடம் சென்று 70 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று கேட்பதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. எங்களுக்கு அதிக தொகுதிகளும் வேண்டும்.. தமிழ்நாட்டின் நலனும் முக்கியம்.. இதுதான் காங்கிரஸ் கட்சியினரின் எண்ணம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications