பாஜகவுக்கு பயந்து பம்முகிறதா திமுக? மன்மோகன்சிங்குக்கு ராஜ்யசபா சீட் தர மறுப்பு?
Recommended Video
சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ராஜ்யசபா சீட் தர திமுக திடீரென மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜகவின் நெருக்கடியால்தான் திமுக இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவி காலம் முடிவடைவகிறது. இதையடுத்து தமிழகத்தில் தற்போது ராஜ்யசபா தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுக 3; அதிமுக 3 ராஜ்யசபா எம்.பிக்களை தேர்வு செய்யலாம். திமுகவின் மூன்றில் 1 இடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுகவுடன் காங். பேச்சுவார்த்தை
எஞ்சிய 2 இடங்களில் ஒன்றை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஒதுக்க திமுக ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்தது. அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்துதான் மன்மோகன்சிங் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தார். தற்போது அஸ்ஸாம் சட்டசபையில் காங்கிரஸுக்கு போதிய எம்.எல்.ஏக்கள் இல்லை.
மன்மோகன்சிங்குக்கு திமுக ஆதரவு
இதனால் திமுகவின் உதவியை காங்கிரஸ் கேட்டிருந்தது. திமுக தலைமையும் மன்மோகன்சிங்கை ராஜ்யசபா எம்.பி.யாக்க ஒப்புக் கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென காங்கிரஸின் கோரிக்கையை திமுக நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜகவுடன் திமுக சமரசம்?
நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தாமல் பிரச்சனைகளை மட்டும் பேசுகிறோம் என பாஜகவிடம் திமுக வாக்குறுதி அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனது தொடர்ச்சியாக தற்போது மன்மோகன்சிங்குக்கு ராஜ்யசபா சீட் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகதான் காரணமா?
பாஜகவின் நெருக்கடியால்தான் மன்மோகன்சிங்குக்கு ராஜ்யசபா சீட்டை தர திமுக மறுத்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸை கழற்றிவிட்டு பெரும்பாலான இடங்களில் திமுக போட்டியிடும் முடிவில் இருக்கிறதாம்.
காங்கிரஸை கழற்றி விடும் திமுக?
இதற்கு முன்னோட்டமாகத்தான் திருச்சியில் ஸ்டாலின் மகன் உதயநிதி, கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடம் கொடுத்தால் போதும் என பேசியிருந்தார். அதேபோல் காங்கிரஸை தூக்கி சுமக்க இனியும் தயாராக இல்லை என கே.என்.நேருவும் நேற்று பேசியிருந்தார். தற்போது மன்மோகன்சிங்குக்கு சீட் இல்லை என்பதும் காங்கிரஸை கழற்றிவிட திமுக தயாராகிவிட்டதாகவே சுட்டிக்காட்டப்படுகிறது.