"அறிகுறி".. ஆட்சி மாற்றத்துக்கா.. "குட்டு" வாங்கியதாலா.. பம்பரமாக சுழல ஆரம்பித்த அதிகாரிகள்
அரசு அதிகாரிகளிடம் எடப்பாடியார் போன் போட்டு பேசினாராம்
சென்னை: ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறி தலைமை செயலகத்தில் மெல்ல மெல்ல தென்பட்டு வருவதாக கூறப்படுகிறது.. அந்த வகையில் அதிகாரிகள் சுழன்று சுழன்று, வேலை பார்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிசல்ட்டை நோக்கி விரல் விட்டு நாட்களை எண்ணி கொண்டிருக்கிறோம்.. அதிமுகவா? திமுகவா? என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், கொரோனா பிரச்சனையால், தலைமை செயலகம் பரபரப்புடனும் இயங்கி வருகிறது..!
இதற்கு ஒரு பின்னணி காரணமும் சொல்லப்படுகிறது.. அதாவது, கடந்த 15 நாட்களுக்கு முன்பு, அரசு அதிகாரிகள் சிலர், திமுக தலைமையை சந்தித்து வாழ்த்து சொல்லி வருவதாகவும், நேரில் சந்திக்க முயற்சி செய்வதாகவும் செய்திகள் வந்தன..

டென்ஷன்
இந்த விஷயம் எடப்பாடியாருக்கு தெரிந்து, டென்ஷனையும் எகிற வைத்து வந்தது... அதாவது போலீஸ் தரப்பு அதிகாரிகள் திமுக தரப்புக்கும், தலைமை செயலக அதிகாரிகள் அதிமுக தரப்புக்கும் சாதகமான மனநிலையில் இருப்பதாக கூறப்பட்டது.

லிஸ்ட்
இதனிடையே, தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்களாம்.. அப்போது எடப்பாடியார், அவர்களிடம் ஒரு லிஸ்ட்டை எடுத்து காட்டி, "இங்கே பாருங்க, 130 தொகுதிகள் அதிமுகவுக்கு சாதகமாக இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.. அதிமுகதான் ஜெயிக்க போகுது.. அடுத்த ஆட்சியும் நாமதான்.. இது தெரியாமல் சில அதிகாரிங்க ஸ்டாலின்கிட்ட பேசிக்கிட்டு இருக்காங்க... அதிமுக ஆட்சி அமையட்டும்... அவங்களை நான் பார்த்துக்கறேன்" என்று சொன்னதாக செய்திகள் பரபரத்தன.

பரவல்
எனினும் அதிகாரிகள் தரப்பில் பெரிதாக எந்த ரியாக்ஷனும் காட்டப்படவில்லையாம்.. இப்படிப்பட்ட சூழலில்தான், கொரோனா பரவலும் இங்கு அதிகமாகி விட்டது. இதனால் அதிமுக அரசு மேலும் கதிகலங்கி போயுள்ளது.. எனவே, இதுகுறித்து உடனடி ஆலோசனை கூட்டங்களையும் நடத்தப்பட வேண்டிய நிலைமை தலைமைக்கு ஏற்பட்டது. காரணம், இப்படிப்பட்ட கூட்டங்களில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளின் ஆலோசனைகள் ரொம்பவும் அவசியம்.

சுகாதாரத்துறை
எனவே, நடக்க போகும் கூட்டங்களில் அதிகாரிகள் பலர் எங்கே கலந்து கொள்ளாமல் போய்விடுவார்களோ, அப்படி கலந்து கொள்ளாவிட்டால், அதிமுக அரசுக்கு மேலும் கெட்ட பெயர் வந்துவிடுமே என்று நினைத்த எடப்பாடியார், சில சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை செயலக அதிகாரிகளுக்கு போனை போட்டு பேசினாராம்.

காரணம்
இதன்பிறகே அத்தனை அதிகாரிகளும் கொரோனா சம்பந்தப்பட்ட மொத்த ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டனராம்.. ஆனாலும் இதற்கு வேறு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.. எப்படியும் ஆட்சி மாற்றம் வரும் என்பதால்தான், இந்த ஆலோசனைகளில் கலந்து கொண்டதாகவும், அதையொட்டியே, கொரோனா பரவல் தடுப்பு குறித்த கிடுகிடு வேலைகள் நடக்க தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications