குஷ்பு,கௌதமியை அசிங்கமாக பேசிய திமுக நிர்வாகி..வழக்கு பாய்ந்தது..முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?
சென்னை: பாஜக பெண் நிர்வாகிகள் குஷ்பு, காயத்ரி ரகுராம், நக்மா, கௌதமி ஆகியோரை தரகுறைவாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திமுக நிர்வாகி சாதிக் மீது சென்னை மத்திய குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் மேற்கு பகுதியில் திமுக சார்பில் சமீபத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக்கின் பேச்சுக்கு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் சைதை சாதிக்கை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்துநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன், நிர்வாகி கோமதி கணேசன் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.
இவர் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்க இருப்பதாக குஷ்பு அறிவித்துள்ளார்.

குஷ்பு கொந்தளிப்பு
இந்த விவகாரத்தில் தி.மு.க. தலைவரும், முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது குஷ்புவை அதிருப்தி அடைய செய்து உள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு,
மிகவும் கீழ்த்தரமாக பொதுமேடையில் பேசியதை தமிழகமே கேட்டு உள்ளது. பேசியவர் மன்னிப்பு கேட்டாயிற்றே இத்துடன் இந்த பிரச்சினையை விட்டு விடலாமே? என்று தி.மு.க.வை சேர்ந்த சிலர் பேசுகிறார்கள்.

சும்மா இருப்பார்களா?
அவர்களுக்கு நான் கேட்பது ஒன்றே ஒன்று தான். உங்கள் குடும்ப பெண்களையும் இதே போல் ஒருவர் பேசினால் நீங்கள் பரவாயில்லை விட்டு விடுவோம் என்று சும்மா விட்டு விடுவீர்களா? இந்த சம்பவத்தால் என் மனசு எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கும் என்பதை பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் உணர்ந்து புரிந்து கொள்வார்கள். இதை நான் சாதாரணமாக விட்டு விடப்போவதில்லை. தேசிய மகளிர் ஆணையத்தில் வழக்கு தொடுக்க போகிறேன். எனக்கும் 19 மற்றும் 22 வயதில் 2 மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன நினைப்பார்கள்.

கேவலமாக பேசலாமா
உன்னை எவ்வளவு தரக்குறைவாக பொது மேடையிலேயே பேசிய போதும் நீ தைரியமாக என்ன செய்தாய்? என்று என் மகள்கள் என்னிடம் கேட்பார்கள் அல்லவா? என் மகள்களை போல எத்தனையோ பெண் குழந்தைகள் என்னை ஒரு ரோல் மாடலாக ஏற்று இருக்கிறார்கள். நான் பயந்து ஒதுங்கினால் அவர்கள் எல்லாம் என்னை பற்றி என்ன நினைப்பார்கள். அவர்கள் எதிர்காலத்தில் தைரியமாக ஒவ்வொரு பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டும் அல்லவா? பொதுமேடையில் எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் பேசி விட்டு சாரி என்று சொல்லி விட்டால் போதுமா? அப்படி பேசியவரை அப்படியே விட்டு விடலாமா?

பயந்து ஒதுங்க மாட்டேன்
இந்த பிரச்சினையில் நான் பயந்து ஒதுங்கி விடவும் மாட்டேன். விட்டு விடவும் மாட்டேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையில் தூங்கி விழிக்கும்போது பயந்து கொண்டே எழும்புவதாகவும், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் யார் என்ன பிரச்சினையை இழுத்து வைத்து உள்ளார்களோ? என்று நினைத்து கொண்டு தூக்கமின்றி தவிப்பதாக கூறியிருந்தார். இப்போது அவர் நினைத்தது போலவே அவரது கட்சிக்காரர் ஒருவர் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து இருக்கிறார். நாகரீகமே இல்லாமல் பேசிய அவர் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார். இதுவரை ஏன் அவரை கட்சியை விட்டு நீக்கவில்லை? என்றும் குஷ்பு கேட்டார்.

சாதிக் மீது வழக்குப்பதிவு
இதனிடையே திமுக நிர்வாகி சாதிக் மீது பாஜக மகளிர் அணி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் குறித்து தரக்குறைவாக பேசுதல், பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குஷ்புவின் வலியுறுத்தல் சாதிக் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications