திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்?
ராமநாதபுரம்: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் யார் யார் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை திமுகவே களமிறங்க வேண்டும் என்பதில் அக்கட்சியினர் மிக உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக, அதிமுக பாஜக, தவெக, சீமான் என 4 முனை போட்டி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அரசியல் கட்சிகளும் தீவிரமாக பணி செய்ய தொடங்கியுள்ளன.

தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து, வேட்பாளர்களை அறிவிக்க பணி செய்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலினும் வேட்பாளர்கள் நேர்காணலை தொடங்கி நடத்தி வருகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை நேரடியாக திமுகவே களமிறங்க வேண்டும் என அக்கட்சியினர் உறுதியாக உள்ளனர். கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்க்கு மாற்றுத் தொகுதியை வழங்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கத்திடம் உள்ளூர் நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
திருவாடானை தொகுதி சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான கருமாணிக்கத்துக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் என்பது ஊரறிந்த ஒன்றாகும். ஓராண்டுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது கூட, திருவாடானை தொகுதியில் இந்த முறை உதயசூரியன் உதிக்கும் எனக் கூறியிருந்தார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.
இதனிடையே முதுகுளத்தூரில் இருந்து மாறி வரும் தேர்தலில், திருவாடானையில் திமுக சார்பில் போட்டியிட அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆர்வம் காட்டுவது கவனிக்கத்தக்கது. அதேபோல் முன்னாள் அமைச்சரும், முன்னாள் சபாநாயகருமான தமிழ் குடிமகனின் சகோதரர் மகன் கண்ணன் பாலுசாமியும் எம்.எல்.ஏ. சீட் ரேஸில் இடம்பிடித்திருக்கிறார். இவர் திமுகவில் ஆர்.எஸ். மங்கலம் பேரூர் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கூட்டணியில் மீண்டும் தொகுதியை கேட்டுப்பெற வேண்டும் என்பதில் சிட்டிங் எம்.எல்.ஏ. தரப்பும் விடாப்பிடியாக நிற்கிறது. திருவாடானை தொகுதியை பொறுத்தவரை இஸ்லாமியர்கள், யாதவர்கள், முக்குலத்தோர் என பல்வேறு சமுதாயத்தினர் பரவலாக உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications