சரியான திட்டமிடல் இல்லை.. சென்னையெங்கும் மழைநீர்.. இதுதான் விடியல் அரசின் சாதனை.. எடப்பாடி தாக்கு!
சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதில் தி.மு.க அரசு தோல்வி அடைந்துள்ளது. சரியான திட்டமிடல் இல்லாததாலே சென்னையில் வெள்ளநீர் தேங்கி உள்ளது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை சென்னை மாநகரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், கே.கே.நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர் முகாமில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு போர்வை, பால் பாக்கெட், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதனை நிருபர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- சென்னை மாநகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாகிவிட்டது.. அரசு சரியான முறையில் திட்டமிடாததால் மழைநீர் வீதிகளில் தேங்கி உள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் நாங்கள் முன்பே திட்டமிட்டு செயல்படுவோம். தி.மு.க அரசு முறையாக திட்டமிடாமல் இருந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இப்பொழுதே இந்த நிலை என்றால் வரும் நாட்களில் கன மழை பொழியும் நிலையில் என்னவாகும்? அரசின் மெத்தன போக்கால் பல்லாயிரக்கணக்கானோர் முகாமில் தங்கியுள்ளனர்.
வானிலை முன்னறிவிப்பு வந்த உடனே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ஸ்டாலின் தலைமையிலான அரசு இனியேனும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோட்டார்கள் மூலம் தண்ணீர் தேங்கிய இடங்களில் நீரை விரைந்து அகற்ற வேண்டும். மாநகராட்சி ஆணையரிடம் நீரை அதிக திறன் கொண்ட எஞ்சின் மூலம் அகற்றுமாறு கூறியுள்ளேன்.
பல இடங்களில் குடிநீருடன் கழிவு நீர் கலந்துள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் ஆகஸ்ட் மாதம் முதலே தூர்வாரினோம். எனவே மழை பெய்த சில மணி நேரத்தில் நீர் வடிந்து விடும். திமுக அரசு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதில் தோல்வி அடைந்துள்ளது. நான் சென்ற 4 இடத்திலும் கண்ணீர் மல்க என்னிடம் புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் யாரும் அங்கு சென்று இதுவரை பார்வையிடவில்லை.
அதிமுக அரசு 3000 இடங்களுக்கு மேல் தண்ணீர் தேங்குவதை கண்டறிந்து அங்கு வடிகாலை ஏற்படுத்தினோம் ..அதனால் 50 இடங்களில் மட்டும் நீர் தேங்கியது. அம்மா உணவகம் மூலம் கொரோனா காலத்தில் நாள்தோறும் 8லட்சம் பேருக்கு சுட சுட உணவளித்தோம். அம்மா பெயரில் இருப்பதால் திமுக அரசு மூட முயற்சிக்கிறது. பணியாளர் ஊதியம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.அரசு முறையாக இனி வரும் நாளில் நடவடிக்கை எடுக்குமா என தெரியவில்லை.. முதலமைச்சர் , அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை. ஸ்டாலின் ஒரு சில இடங்களை மட்டுமே சென்று பார்வையிட்டுள்ளார்.
மழை வெள்ள பாதிப்பை அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் மக்களை துன்பத்திலிருந்து அரசு மீட்டெடுக்க வேண்டும். மழை குறித்த விழிப்புணர்வை அரசு பொதுமக்களுக்கு முறையாக வழங்கவில்லை. எங்கள் ஆட்சியில் அடையாறு, கூவம்,கொசஸ்தலையில் முறையாக நிதி பெற்று தூர் வாரினோம். ஸ்டாலின் விளம்பரம்தான் தேடுகிறார். திட்டமே செயல்படுத்தாமல் தான் செய்தது போல வெளிப்படுத்தி கொள்கிறார். எனது உதவியாளரிடம் சோதனை நடத்தி எனக்கு அவப்பெயர் உண்டாக்க முயற்சிக்கிறார்கள். 2007 ல் நான் சட்டமன்ற உறுப்பினாராக இருக்கும் போதே என் வீட்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி சோதனை செய்தார்கள். திமுக அரசு பழிவாங்கும் அரசாக உள்ளது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications