புரட்சி வரலாறுகளை பேசி பேசியே வளர்ந்த திமுக.. முதல்வர் ஸ்டாலின் பேசியது தெரியாமல் விமர்சித்த விஜய்!
சென்னை: "உலக வரலாறு, தலைவர்கள் கோட்ஸ் என எம்பி 3 ஆடியோ போல, கொந்தளிப்பாக பேசுவது அரசியல் இல்லை" என தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநாட்டில் அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய் பேசியிருந்தார். அதற்கு முன்னதாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், "திராவிட முன்னேற்றக் கழகம் என்பதே, பேசிப் பேசி வளர்ந்த கழகம்! அந்தக் காலத்தில், பேசிப் பேசியே ஆட்சியை பிடித்த இயக்கம்" என்றுதான் திமுகவை சொல்வார்கள் என குறிப்பிட்டிருந்தார்.
விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய், பாஜக மற்றும் திமுகவை சித்தாந்த, அரசியல் எதிரிகளாக அறிவித்தார். மேலும் உலக வரலாறு, தலைவர்கள் கோட்ஸ் என எம்பி 3 ஆடியோ போல, கொந்தளிப்பாக பேசுவது அரசியல் இல்லை எனவும் நடிகர் விஜய் கூறியிருந்தார்.

விஜய் இப்படி பேசுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக என்பதே பேசிப் பேசி வளர்ந்த இயக்கம் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சென்னை நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திராவிட முன்னேற்றக் கழகம் என்பதே, பேசிப் பேசி வளர்ந்த கழகம்! அந்தக் காலத்தில், பேசிப் பேசியே ஆட்சியை பிடித்த இயக்கம்" என்று நம்முடைய இயக்கத்தைப் பற்றிச் சொல்லுவார்கள். ஆனால், அவர்கள் சொல்ல மறந்தது, இல்லை- சொல்லாமல் தவிர்ப்பது என்னவென்றால், நாம் பேசிய பேச்செல்லாம் வெறும் அலங்கார அடுக்குமொழி அல்ல, உலகம் முழுவதும் நடந்த புரட்சி வரலாறுகளைப் பேசினோம்; உலக அறிஞர்களின் வரலாற்றைப் பேசினோம்; நம் நாட்டில் நடைமுறையில் இருந்த கொடுமைகளைப் பேசினோம்; மூடநம்பிக்கை - பிற்போக்குத் தனம் - பெண்ணடிமைத்தனம் - இவைகளுக்கு எதிராகப் பேசினோம்.
ரத்தம் கக்கிய நிலையிலும் இந்தச் சமூகத்தின் இழிவு நீங்கப்பேசினார் - அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள்! 95 வயதிலும் மூத்திரவாளியைச் சுமந்து கொண்டு, வலியைத் தாங்க முடியாத அளவிற்குப் பேசியவர் - தந்தை பெரியார் அவர்கள்! சாக்ரடீஸ், தமிழர்கள் மீதான டெல்லியின் பாரபட்சம் என்று அனைத்து தலைப்புகளிலும் மடைதிறந்த வெள்ளம்போல் பேசினார் - பேரறிஞர் அண்ணா அவர்கள்! அண்ணா பரம்பரை என்றே சொல்லும் அளவிற்கு இன்றைக்கு வரைக்கும், அண்ணா உருவாக்கிய மேடைத்தமிழ் பரம்பரையைச் சேர்ந்த பேச்சாளர்கள் இருக்கிறார்கள்.
சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள் என்று பழந்தமிழ் இலக்கியங்களை அழகுதமிழில் பாமர மக்களுக்கும் கொண்டு சென்றார் நம்முடைய தலைவர் கலைஞர்அவர்கள். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தலைவர் கலைஞர் ராஜா ராணி படத்தில் எழுதிய வசனத்தை ஒரு போட்டியாளர் பேச, அது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது! அந்தப் படத்தில் சாக்ரடீஸ் ஓரங்கநாடகத்தில் நம் இயக்கம் அடுக்குமொழியால் வளர்ந்தது அல்ல; அறிவார்ந்த கருத்துகளால் வளர்ந்த இயக்கம் என்று தலைவர் கலைஞர் எழுதி இருப்பார்! நாவலர் - பேராசிரியர் - சொல்லின் செல்வர் - சிந்தனைச் சிற்பி – தத்துவமேதை என்று நம் இயக்கத்தில் இருக்கும் தலைவர்களின் பெயர்களே, அவர்கள் எப்படிபட்ட ஆற்றல்மிக்க பேச்சாளர்களாக இருந்தார்கள் என்று சொல்லும்! பேச்சுக்கலை மிக மிக வீரியமிக்கது! சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது! “சொல்வன்மை மிக்கவனை வெல்வது அரிது” என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications