"அண்ணாமலையின் அடுத்த புளுகு.. பூட்டிய அறையில் பிரதமர் மோடி சொன்னது என்ன?" திமுக ஹஃபீசுல்லா விளாசல்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பூட்டிய அறைக்குள் பேசியது தொடர்பாக பாஜக எந்த பதிலும் அளிக்காமல் அண்ணாமலை பேசி வருவதாக திமுக செய்தித் தொடர்பு மாநில துணை செயலாளர் சையத் ஹஃபீசுல்லா விமர்சித்து உள்ளார்.
அண்மையில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியபோது, "கடந்த 2004 - 2014, திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிப் பங்கீடு 32% மட்டுமே. இன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரிப் பங்கீடு 42% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2004 - 2014 காலகட்டத்தில், திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு, தமிழகத்துக்கு வழங்கிய வரிப் பங்கீடு ரூ. 94,977 கோடி மட்டுமே. 2014 முதல் 2024 வரையிலான பத்து ஆண்டுகளில், பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு வழங்கிய வரி பங்கீடு ரூ.2,77,444 கோடி.

192% அதிகமாக தற்போது வழங்கப்பட்டுள்ளது. 2004 - 2014 வரை தமிழகத்துக்கு வழங்கிய உதவித்தொகை ரூ. 57,924.42 கோடி மட்டுமே. 2014 - 2023 வரையிலான ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்துக்கு வழங்கிய உதவித்தொகை, 2,30,893 கோடி. 300% அதிகமாக தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ரூ.6,412.15 கோடி தமிழக உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லாக் கடன் உதவியாக நமது மத்திய அரசு வழங்கியுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில், தமிழகத்திற்கான திட்டங்கள், உதவித் தொகை மற்றும் நிதி பங்கீட்டின் மதிப்பு, ரூ.10.76 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். தமிழகத்தின் நேரடி வரிப் பங்களிப்பான 5.16 லட்சம் கோடியை விட இரண்டு மடங்கு அதிகமாக நமது பிரதமர் மோடி அரசு திரும்பிக் கொடுத்துள்ளது. இதன் விவரங்களை வெள்ளை அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளது. திமுகவின் பொய்களை இனியும் நம்பி ஏமாற மக்கள் தயாராக இல்லை." என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் திமுக செய்தித் தொடர்பு மாநில துணை செயலாளர் மருத்துவர் செய்யது ஹஃபீசுல்லா எக்ஸ் தளத்தில் அண்ணாமலை கருத்துக்கு பதிலளித்து உள்ளார். அதில், "அண்ணாமலையின் அடுத்த புளுகு. "மாநிலங்களுக்கான வரிப்பங்கீட்டை காங்கிரஸ் ஆட்சி 30.5%லிருந்து 32%ஆக உயர்த்தியது. பிரதமர் மோடி அதை 42% ஆக்கினார்" - அண்ணாமலை
அண்ணாமலையின் அடுத்த புளுகு
— Dr.S.A.S. Hafeezullah (@DrHafeezDMKoffl) February 10, 2024
"மாநிலங்களுக்கான வரிப்பங்கீட்டை காங்கிரஸ் ஆட்சி 30.5%லிருந்து 32%ஆக உயர்த்தியது. பிரதமர் மோடி அதை 42% ஆக்கினார்"- அண்ணாமலை
BVR. சுப்ரமணியம் யார் என்று தெரியுமா அண்ணாமலை?
நிதி ஆயோக் அமைப்பின் தற்போதைய CEO. 2012-2015 பிரதமர் அலுவலகத்தில்…
BVR. சுப்ரமணியம் யார் என்று தெரியுமா அண்ணாமலை? நிதி ஆயோக் அமைப்பின் தற்போதைய CEO. 2012 - 2015 பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றியவர். வரிப்பங்கீடு 42% ஆக உயர்த்தப்பட்ட 14 வது நிதி ஆணையம் பற்றி சுப்ரமண்யம் சொன்னது தெரியுமா? மாநிலங்களுக்கான வரிப் பங்கீட்டை 42% ஆக்க வேண்டாம் 32% லேயே நீடிக்க வேண்டும் என 14 வது நிதி ஆணையத் தலைவர் ஒய்.வி.ரெட்டியிடம் மோடி வலியுறுத்தினார். அதை ஏற்க ஒய்.வி.ரெட்டி மறுத்தார் என்பது பாலசுப்ரமணியம் சொன்ன தகவல்.
பிரதமர் மோடி, ஒய்.வி.ரெட்டி, பாலசுப்ரமணியம் மூவர் மட்டும் இருந்த இடத்தில் இது நடந்ததாக கூறினார். மோடியின் அழுத்தத்திற்கு ரெட்டி பணியாததால் நிதி ஆணைய பரிந்துரை ஏற்றுக் கொள்ள தாமதம் செய்யப்பட்டது. ஒன்றிய அரசின் பட்ஜெட் இரண்டு நாட்களில் திருத்தப்பட்டது என்றும் சொல்லியிருக்கிறார் சுப்ரமணியம். அவர் சொல்லி 7 மாதங்களாகிறது இன்னும் இதற்கு பாஜக பதிலளிக்கவில்லை. மாநிலங்களுக்கான வரிப்பங்கீட்டைக் குறைக்க பூட்டிய அறையில் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு, வெளியே வந்து வரிப்பங்கீட்டை நாங்கள் உயர்த்தினோம் என்று சொல்ல உங்களுக்கும் உங்கள் பிரதமருக்கும் வெட்கமாக இல்லையா?" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications