இது மட்டும் நடந்துவிட்டால்.. தீவிர முயற்சியை முன்னெடுக்கும் திமுக! ஜூன் 3ஆம் தேதி கிளைமாக்ஸ்!
தேசிய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் முயற்சியில் திமுக.
சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் முரண்பட்டு நிற்கும் மம்தா, கே.சி.ஆர். உள்ளிட்ட தலைவர்களை ராகுல்காந்தியுடன் ஒரே மேடையில் ஏற்றுவதற்கான முயற்சியை திமுக முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் 3ஆம் தேதி திருவாரூரில் நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அகில இந்திய அரசியல் தலைவர்களை பங்கேற்க வைக்க ஸ்டாலின் விரும்புகிறார்.
மூன்றாவது அணி வேண்டாம் என்பதில் மிக உறுதியாக உள்ள ஸ்டாலின் அதற்கேற்ப அரசியல் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளார்.

திருவாரூரில் விழா
திருவாரூரில் ஜூன் 3 ஆம் தேதி அன்று, திமுக தலைமை கழகத்தால் கருணாநிதி நூற்றாண்டு தொடக்கவிழா மாநாடு நடைபெற இருக்கிறது. தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் அமைக்கப்பட்டுள் "கலைஞர் கோட்டம்" வளாகம், கருணாநிதி அருங்காட்சியகம், திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்கள் திறக்கப்படுகின்றன. இந்த கட்டிடங்களை அகில இந்திய அரசியல் தலைவர்களை வைத்து திறந்து வைக்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.

ஒரே அரசியல் நேர்கோடு
கருணாநிதி தொடக்க விழா மாநாடு நடைபெறும் ஜூன் 3ஆம் தேதி அன்று காலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களும், மாலையில் அகில இந்திய அரசியல் தலைவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள். அந்த வகையில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, கே.சி.ஆர்.,அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரை ஒரே அரசியல் நேர்கோட்டில் இணைக்க வைக்கும் விதமாக அவர்களை ஒரே மேடையில் ஒன்றாக அமர வைக்க திமுக தலைமை விரும்புகிறது.

3வது அணி முறியடிப்பு?
இதன் மூலம் மூன்றாவது அணியை தோற்றுவிக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பது ஸ்டாலின் போடும் கணக்காக உள்ளது. இதனிடையே இந்த விழாவில் பங்கேற்க குறிப்பாக ஒரே மேடையில் ஒன்றாக அமர மேற்கண்ட அகில இந்திய தலைவர்கள் அனைவரும் இசைவு தெரிவிப்பார்களா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது அணி வேண்டாம் என்பதில் ஆரம்பம் முதலே ஸ்டாலின் மிக உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

டி.ஆர். பாலு
ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு அழைப்பிதழ் பணிகளை திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. கவனித்துக் கொள்கிறார். அகில இந்திய அரசியல் தலைவர்களை வேறுபாடுகள் கடந்து இந்த விழாவில் பங்கேற்க வைக்க வேண்டிய பொறுப்பு டி.ஆர்.பாலு வசம் கொடுக்கப்பட்டுள்ளதால் அவர் அது தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications