ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் சொல்வதற்காக முதலமைச்சரை சந்திக்க யாரும் வர வேண்டாம் -திமுக தலைமைக்கழகம்
சென்னை: ஆங்கில புத்தாண்டு வாழ்த்து பெறுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க வருவதை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என திமுக தலைமைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது ஒரு காரணம் என்றாலும் புத்தாண்டு அன்று தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் அன்றைய தினம் அது தொடர்பான பணிகளுக்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுக்கக் கூடும் எனத் தெரிகிறது.

அதேபோல் சென்னை மக்களும், தென் மாவட்ட மக்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்கும் வகையில் திமுக தலைமைக்கழகம் இப்படியொரு அறிவிப்பை இன்று மாலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு;
''வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வருவதை, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கட்டாயம் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமைக்கழகம் என்னதான் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டாலும் கூட ஜனவரி 1 அன்று வழக்கம் போல் கட்சியினர் கூட்டம் முதலமைச்சரை சந்திக்க திரண்டு விடும் எனத் தெரிகிறது. முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை சென்னை மக்களும், தென் மாவட்ட மக்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் தான் திமுக இளைஞரணி மாநாட்டையே தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கிறார்.
வரும் தை 1ஆம் நாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என அனைவரையும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications