இதுதான் காரணம்.. 3*1 பார்முலாவை கையில் எடுத்த ஸ்டாலின்.. அதிர்ந்து போன மதிமுக, காங்.. முழு பின்னணி
சென்னை: 2021 சட்டசபை தேர்தலுக்காக தமிழகத்தில் முக்கியமான பார்முலா ஒன்றை திமுக கையில் எடுத்து இருக்கிறது.. திமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இழுபறியில் செல்வதற்கும் இந்த பார்முலாதான் காரணம் என்கிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் திமுக இன்னும் முழுமையாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை செய்து முடிக்கவில்லை. இன்னும் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக கூட்டணி ஒப்பந்தங்களை செய்ய வேண்டும்.
கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுத்து சர்ப்ரைஸ் கொடுப்பதே இத்தனை வருடமாக திமுகவின் ஸ்டைலாக இருந்தது. ஆனால் இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்து ஸ்ட்ரிக்ட் ஆபிசராக திமுக மாறியுள்ளது. திமுகவின் இந்த மாற்றத்திற்கு பின் முக்கியமான பார்முலா ஒன்று இருக்கிறது.
பார்முலா
அதன்படி லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை வைத்துதான் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீட்டை திமுக நிர்ணயிக்கிறது. எம்பி தேர்தலில் கட்சிகள் செயல்பட்ட விதத்தை வைத்தே திமுக இந்த முறை இடங்களை ஒதுக்குகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் திமுக தமிழகத்தில் 20 இடங்களில் போட்டியிட்டது. மற்ற இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தது.
எத்தனை இடங்கள்
காங்கிரஸ் 9 இடங்களில் போட்டியிட்டது, சிபிஐ 2, சிபிஎம் 3, விசிக 2, இந்திய யூனியன் முஸ்லீக் லீக் 1, இந்திய ஜனநாயக கட்சி 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 1 ஆகிய இடங்களில் போட்டியிட்டது. இதில் ஐஜேகே கூட்டணியில் இருந்து சென்றுவிட்டது. மீதம் உள்ள கட்சிகளுக்கு திமுக இடங்களை ஒதுக்க வேண்டும்.
ஒதுக்கீடு
லோக்சபா தேர்தலில் இந்த கட்சிகள் எல்லாம் எத்தனை தொகுதியில் போட்டியிட்டதே அதை மூன்றால் பெருக்கி வரும் தொகுதியைத்தான் சட்டசபை தேர்தலில் ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது. அதாவது விசிக 2 தொகுதியில் போட்டியிட்டதால் அதை மூன்றால் பெருக்கி 6 தொகுதிகளை மட்டும் கொடுக்க திமுக முடிவு செய்தது. இந்த 3*1 பார்முலாவைதான் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் பயன்படுத்தி வருகிறது.
எப்படி வழங்குகிறது
ஒரு லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீக் லீக் கட்சிக்கு இதன் அடிப்படையில்தான் 3 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மமகவிற்கு லோக்சபா தேர்தலில் இடம் கொடுக்காத நிலையில் சட்டசபை தேர்தலில் 2 இடங்களை கொடுத்துள்ளது. திமுகவின் இந்த பார்முலாதான் காங்கிரஸ், மதிமுக இரண்டையும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
காங்கிரஸ்
இந்த 3*1 பார்முலா மூலம் காங்கிரஸ் 9 லோக்சபா இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வென்றதால் 3*8 = 24 இடங்களை மட்டுமே கொடுக்கும் எண்ணத்தில் திமுக உள்ளது. இந்த கணக்குப்படி மதிமுகவிற்கு 3 இடங்கள் மட்டுமே கிடைக்கும். இதைத்தான் இரண்டு கட்சிகளும் விரும்பவில்லை. பெரிய ஆலோசனைக்கு பின்பும், டேட்டா சரிபார்ப்பிற்கு பின்பும்தான் திமுக இந்த முடிவை எடுத்துள்ளது.
முடியாது
என்ன நடந்தாலும் இந்த பார்முலாவை தாண்டி ஒன்று இரண்டு சீட்களை மட்டுமே கொடுப்போம். அதற்கு மேல் சாத்தியம் இல்லை என்ற முடிவில் திமுக இருக்கிறது. திமுக கணக்குப்படி அதிகபட்சம் காங்கிரஸ் 27, மதிமுக 6 இடங்களை பெறலாம். அதற்கும் மேல் இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்பு இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு வாரமாக இழுபறியில் இருக்க இதுதான் காரணம் ஆகும்!