உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி-சாமியாருக்கு நன்றி! நாங்களும் ரூ.10 கோடி தரனும்..ஆ.ராசா இப்படி சொன்னது ஏன்?
சென்னை: சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியதால் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதியை பெரிதும் மதிக்கிறேன்; அவரை எதிர்காலத் தலைவராக உருவாக்கி வருகின்றனர் வட இந்திய தலைவர்கள் என திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. தெரிவித்துள்ளார்.
திராவிட மாதத்தை முன்னிட்டு ட்விட்டர் ஸ்பேஸில் நெட்டிசன்களின் கேள்விகளுக்கு ஆ.ராசா அளித்த பதில்:

சனாதனம் தெரியாத தலைவர்கள்: ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை எதிர்க்கக் கூடிய சித்தாந்த பலம் திமுகவுக்கு இருக்கிறது என்பதைத்தான் தம்பி உதயநிதி நிரூபித்துள்ளார். தம்பி உதயநிதி பேசியதால் வட நாடு இன்று அலறுகிறது. சனாதன தர்மம் என்ன என்பது தெரியாமல் இத்தனை தலைவர்கள் பேட்டி கொடுக்கின்றனர். கூட்டணி கட்சித் தலைவர்களே பேட்டி தருகின்றனர். மமதா பானர்ஜியும் பேட்டி தந்துள்ளார். சனாதன தர்மத்தில் என்ன இருக்கிறது என்பது யாருக்காவது தெரியுமா?
சனாதனமும் திராவிடமும்: திராவிட சித்தாந்தம் ஏன் தேவைப்படுகிறது? திராவிட சித்தாந்தம் ஏன் இன்னமும் இருக்கிறது? ஏன் உதயநிதி அப்படி பேசினார்? தம்பி உதயநிதி அமைச்சராக இருப்பதைவிட, இளைஞரணி செயலாளராக இருப்பதைவிட இன்றைக்கு அவர் பேசிய பேச்சுக்காக மதிக்கிறேன். சனாதன தர்ம பேச்சு ஏன் தமிழ்நாட்டில் பிரளயத்தை ஏற்படுத்த முடியவில்லை? அண்ணாமலையால் ஏன் முடியவில்லை? வானதி சீனிவாசனால் ஏன் நெருங்க முடியவில்லை? ஏனெனில் 100 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை பிரசாரம் செய்திருக்கிறது திராவிட இயக்கம். இடையில் வேண்டுமானால் இந்த பிரசாரத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கலாம். அந்த நல்ல பணியை தம்பி உதயநிதி ஸ்டாலின் எடுத்திருக்கிறார்.
எது சனாதனம் தெரியுமா?: சனாதனம் என்றாலே ஆரிய மதம். அது ஆரியர்கள், பிராமணர்களுக்கு சொந்தமானது. அந்த ஆரிய மதமோ, பிரமாணிய மதமோ திராவிடத்தில் எப்போதும் இருந்தது இல்லை. சோழர் காலத்தில் ஊடுருவியது. அதனால்தான் நமக்கு சனாதன உணர்வு எதுவும் இல்லை. சனாதனம் என்பது 4 வர்ணத்தை குறிப்பது. சனாதனம் என்பது ஏற்றத் தாழ்வுகளை ஏற்றுக் கொள்வது. சனாதனம் என்பது ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் சமூகம் அமைதியாக இருக்கும் என்ற தத்துவத்தை அன்றைக்கு சொன்னது. ஒரு ஊரில் 2 பார்பர் இருக்கனும்.. 4 டோபி இருக்கனும்.. வண்ணார் இருக்கனும்.. மருத்துவர் இருக்கனும்.. பிணத்தை தூக்க ஆதி திராவிடர் இருக்கனும்.. செருப்பு தைக்க ஆதி திராவிடர் இருக்கனும்.. உழைப்பதற்கு நான்கு இடைநிலை சாதிகள் இருக்கனும். இதை ஆள்வதற்கு பெரிய ஜாதி இருக்கனும். ஓதுவதற்கு பிராமணர்கள் இருக்கனும். அதற்கு கோவில் இருக்கனும். கோவிலுக்கு பல ஏக்கர் சொத்து இருக்கனும். இவைதான் சனாதனம் சொன்ன சமூக நல்லிணக்கம்/ சமூக அமைதி. இதனால் அவர்களுக்கு கல்வி கொடுக்காமல் வேலைகளை மட்டும் ஒதுக்கினார்கள். கல்வியை மறுத்து அந்த சமூகங்களுக்கு வேலையை ஒதுக்கினார்கள்.
சனாதனம் குறித்த புரிதல்: அனைத்து நாடுகளிலும் ஒரு தொழிலை ஒரு சமூகம் செய்துவிட முடியாது. நான் போட்டிருக்கும் உடையை நானே உருவாக்கிவிட முடியாது. சமூகத்தில் ஒருவரது தேவையை இன்னொருவர் பூர்த்தி செய்வதற்காக தொழிலை பிரித்து கொள்வது இயல்பு. ஆனால் அந்த தொழிலையே குலத் தொழிலாக மாற்றி ஜாதியாக மாற்றிய பெருமை இந்த சனாதனத்துக்கு உண்டு. அதனால்தான் சனாதனத்தை நாம் ஏற்கவில்லை. அந்த சனாதனத்தைதான் பெரியார், அண்ணா புரிய வைத்தனர். அம்பேத்கர் தனி மனிதராக முயற்சித்தார். அமைப்பு அவருக்கு இல்லை. ஆனால் அம்பேத்கர் எழுத்துகள் இருக்கின்றன.
திமுகவும் சனாதனமும்: பெரியாருக்கு பின்னால் மிகப் பெரிய நிறுவனம் இருந்ததால் இன்றைக்கு திராவிட இயக்கம் வளர்ந்து சனாதன தர்மத்தை எதிர்க்கக் கூடிய வல்லமையை பெற்றிருக்கிறது. வடநாட்டில் அறியாமையால் பேசுகின்றனர். சனாதனத்தை அறிந்த நாங்கள் சொல்கிறோம்.. விரைவில் டெல்லி வரை சனாதன தர்மம் என்றால் என்ன? அது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். அதிலே எங்களுக்கு கூச்ச நாசமில்லை என்பதை சொல்ல கூடிய மன திடத்தை திமுகவின் கடைசி தொண்டனும் பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

எதிர்கால தலைவர் உதயநிதி: ஒரு தலைவர் உருவாவதற்கு புறச்சூழல்கள் அமைய வேண்டும். அண்ணா மறைந்த பிறகு அன்றைக்கு ஒரு சூழல் இருந்த காரணத்தால் கருணாநிதி தலைவரானார். உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ10 கோடி அறிவித்து ஒரு நல்ல காரியம் செய்துள்ளனர். அதாவது உதயநிதி ஸ்டாலின் என்ற எதிர்காலத் தலைவரை இப்போது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அனைவரும் சேர்ந்து செய்திருக்கிறார்கள். அதற்காக நன்றிதான் சொல்லனும். நாம் ரூ.10 கோடி அறிவித்த ஆளுக்கு இன்னொரு ரூ.10 கோடி தர வேண்டும்.. அவ்வளவு பெரிய வேலையை அவர் செய்திருக்கிறார். இவ்வாறு ஆ.ராசா எம்.பி. தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications