மாநிலத்தின் கடன் ரூ.4.56 லட்சம் கோடி..மக்கள் காதில் பூ சுற்றுகிறார் முதல்வர்.. ஸ்டாலின் விமர்சனம்!
சென்னை: மாநிலத்தின் கடன் ரூ. 4.56 லட்சம் கோடியைத் தாண்டி விட்டது. கொரோனா பரவலைத் தடுப்பதிலும், மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக முக ஸ்டாலின் அவரது பேஸ்புக் பதிவில், ''கொரோனா மரணங்கள் 10000-ஐத் தாண்டி விட்டது. கொரோனா நோயால் 24,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் தமிழகம்!
மாநிலத்தின் கடன் ரூ. 4.56 லட்சம் கோடியைத் தாண்டி விட்டது. கொரோனாவின் கொடூரமான பிடியில் சிக்கி - தொழில் முதலீடுகள் இன்றியும் - வருமானத்தை இழந்தும் - வேலைவாய்ப்புகள் இல்லாமலும் தடுமாறி - தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்கள்!
கொரோனா தொற்று... ஜெட் வேகத்தில் முந்திச் செல்லும் ஆந்திரா.... கர்நாடகா!!
இப்படி அனைத்து வகையிலும் தோல்வியடைந்த முதல்வர் பழனிசாமி, நாட்டின் முக்கிய முதலீட்டு மையமாகத் தமிழகம் மாறியிருப்பதாக மக்கள் காதில் பூ சுற்றுகிறார்.
அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள், இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் ஊழலின் சுரங்கமாக இருக்கும் கொரோனா கொள்முதல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?'' என்று கேட்டுள்ளார்.