100 நாள் வேலைத்திட்டத்தில் 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை... மத்திய அமைச்சருக்கு திமுக கடிதம்..!
சென்னை: 100 நாள் வேலைத்திட்டத்தில் 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் சென்ற அக்டோபர் முதல் கடந்த மூன்று மாதங்களாக நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் கிராமப் புற ஏழை எளிய மக்களுக்கு ஊதியம் அளிக்கப்பட வில்லை என்பதை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக டி.ஆர் பாலு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த சில நாட்களாக தமிழ் நாடு முழுவதும் கிராம மக்கள் சபைக் கூட்டங்கள் நடத்தி, அவை வாயிலாக கிராமப்பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறது. மக்கள் குறைகேட்கும் இக்கூட்டங்களில் பங்கேற்கும் பல்வேறு மாவட்டங்களில், கிராமப் பகுதி மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்கள், அக்டோபர் மாதம் முதல் சென்ற மூன்று மாதங்களாக தங்களுக்கு ஊதியம் அளிக்கப்பட வில்லை என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
100 நாள் வேலைத் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருவாயை உறுதிப்படுத்தும் திட்டமாகும். இதில் பணியாற்றிடும் மக்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்காமல், அதுவும் மூன்று மாதங்களாக வழங்காமல் தாமதம் செய்வது அந்த ஏழைத்தொழிலாளர்களின் அன்றாட வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் மறுத்து சிதைப்பதுடன் அவர்களை ஆரிருளில் தள்ளிவிடும் கொடுமை ஆகும்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்.. சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டுக -ஸ்டாலின் கடிதம்
எனவே, இந்த பிரச்சினையை மத்திய அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு தேவையான நிதியை வழங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வரும் அனைவருக்கும் மூன்று மாதங்களாக தராமல் நிறுத்தி வைக்க பட்டுள்ள ஊதியம் அனைத்தையும் வழங்கிட வேண்டும் .மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண் துறை அமைச்சர் தோமரிடம் இவ்வாறு டி.ஆர் பாலு தனது கடிதத்தில் வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.