‛மேம் மேம்.. ப்ளீஸ்..’ அமைச்சர் உதயநிதியிடம் வந்து விழுந்த கேள்வியால் பதறிய நிர்வாகிகள்.. என்னாச்சு?
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டியில் ராணுவ வீரர் பிரபு அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் உதயநிதியை சூழ்ந்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர்.
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக பேரூராட்சி கவுன்சிலர் சின்னசாமி உள்ளிட்டவர்கள் தாக்கியதில் ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் சின்னசாமி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சூழ்ந்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழப்பியபோது, ‛‛மேம்.. மேம்.. ப்ளீஸ்'' நிர்வாகிகள் கூறி அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன்(30). இவரது தம்பி பிரபு(29). இவர்கள் 2 பேரும் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் வேலம்பட்டி எம்ஜிஆர்நகரை சேர்ந்தவர் சின்னசாமி (50). இவர் நாகோஜனஹள்ளி பேரூராட்சி 1வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலரானார்.
இந்நிலையில் தான் பொது தண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்த விவகாரத்தில் கவுன்சிலர் சின்னசாமி மற்றும் பிரபாகரன் குடும்பத்துக்கு இடையே பிரச்சனை இருந்துள்ளது. இதில் கவுன்சிலர் சின்னசாமி தனது குடும்பத்தினருடன் சென்று ராணுவ வீரர்களான பிரபாகரன், பிரபு மற்றும் குடும்பத்தினரை தாக்கியதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த ராணுவ வீரர்
இதில் பிரபாகரன், பிரபு உள்பட 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ராணுவ வீரரான பிரபு கடந்த 14ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரில் கவுன்சிலர் சின்னசாமி, குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி, மணிகண்டன், மாதையன், புலிபாண்டி, வேடியப்பன், காளியப்பன், உள்ளிட்டர்வகளை கைது செய்யப்பட்டுள்ளனர்.

எஸ்பி எச்சரிக்கை
இதற்கிடையே தான் இந்த கொலை சம்பவத்துக்கு பாஜக, அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் ராணுவ வீரருக்கே பாதுகாப்பு இல்லை என அவர்கள் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும் கொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் ட்விட்டர் உள்ளிட்ட வலைதளங்களில் பரவின. போலியான தகவல்களும் பரப்பப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணகிரி எஸ்பி சரோஜ் குமார் எச்சரிக்கை விடுத்தார். ‛‛ராணுவ வீரர் கொலையில் அரசியல் உள்நோக்கம் இல்லை. தவறான நோக்கத்தில் தகவல் வெளியிடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரித்து இருந்தார்.

உதயநிதியிடம் கேள்வி
இந்நிலையில் தான் ராணுவ வீரர் பிரபு கொலை குறித்து இன்று விளையாட்டுத்துறை அமைச்சரும், முதல்வர் முக ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினை சூழ்ந்து பத்திரிகையாளர்கள்கள் கேள்வி எழுப்பினர். ராணுவ வீரர் பிரபு கொலையில் திமுக கவுன்சிலரை குறிப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின், ‛‛வழக்கில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிறையில் உள்ளார்'' என்றார்.

குடும்ப பிரச்சனையில்...
இதையடுத்து பெண் பத்திரிகையாளர், ‛‛அவர் உங்கள் கட்சியை சேர்ந்தவர் தானே'' என கேள்வி எழுப்பியபோது, ‛‛போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்'' என உதயநிதி ஸ்டாலின் கூறினார். இருப்பினும் விடாத பெண் பத்திரிகையாளர், ‛‛முதல்வர் அல்லது கட்சியின் முக்கிய தலைவர்கள் யாரும் இதுபற்றி எதுவும் கூறவில்லையே'' என கேட்டபோது, ‛‛அது குடும்ப பிரச்சனையில் நடந்துள்ளது'' என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

பதறிய நிர்வாகிகள்
இதையடுத்து உதயநிதி ஸ்டாலினை கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து அழைத்து சென்றனர். முன்னதாக பெண் பத்தரிகையாளர் கேள்வி கேட்டபோது, உதயநிதி ஸ்டாலினின் அருகே நின்ற நிர்வாகிகள் ‛‛மேம்.. மேம்.. ப்ளீஸ்..'' என்றபடி பதறினார்கள். இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications