புதிய மாவட்டம் ஏற்படுத்த வேண்டும்.. திமுக எம்.எல்.ஏ கோரிக்கை.. 39வது மாவட்டமாகிறதா மாதவரம்?
சென்னை : இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய திமுக எம்.எல்.ஏ சுதர்சனம், மாதவரத்தை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் இருந்துவந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாட்டில் புதிதாக 6 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. கடைசியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று காலை பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. முன்னதாக, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மீண்டும் கொண்டு வரப்பட்டு, சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா இன்றே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் மீதான விவாவத்தில் பங்கேற்றுப் பேசினர்.

தனி மாவட்டம் வேண்டும்
வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய மாதவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், மாதவரம், திருவொற்றியூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி மாதவரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், மாதவரம் முதல் திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் இணைப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும் மாதவரம் பால் பண்ணைக்கு சொந்தமான இடத்தில் மினி டைட்டில் பார்க் அமைக்க வேண்டும் எனவும் சுதர்சனம் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்தார்.

மாதவரத்திற்கு கோரிக்கை
மேலும், மாதவரம் புதிய பேருந்து நிலையம் ரவுண்டானா முதல் சோழவரம் சுங்கச்சாவடி வரை போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய சுதர்சனம், இதனை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தொடர்ந்து, மாதவரம் தொகுதியில் மூலிகை ஆராய்ச்சி மையம் அமைத்திட வேண்டும் எனவும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கும் மாதவரம் முன்னர் நகராட்சியாக இருந்தது. பெருநகர சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்யும்போது, மாதவரம் நகராட்சி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் மாதவரம் உட்பட 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் தான் மாதவரத்தை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம்.












Click it and Unblock the Notifications