"பாஜக தேர்தல் அறிக்கை பக்கம் 21, பாயிண்ட் நம்பர் 10" சட்டசபையில் வானதி சீனிவாசனுக்கு திமுக பதிலடி!
சென்னை: காவிரி பிரச்சனையில் திமுக அரசு இயலாமையை வெளிப்படுத்துகிறது என சட்டசபையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு திமுக எம்.எல்.ஏ. பரந்தாமன் பொளேர் பதிலடி கொடுத்து அக்கட்சி சீனியர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ. பரந்தாமன் நேற்று பேசியதாவது:
காவிரி விவகாரத்தில் திமுக அரசு இயலாமையை காட்டுகிறது என்று நேற்று வானதி சீனிவாசன் பேசினார்.

பக்கம் 21, பாயிண்ட் 10: 2019-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில், பக்கம் 21 பாயிண்ட் நம்பர் 10- லிங்கிங் ஆப் ரிவர்ஸ் என்று ஒரு தலைப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 9 ஆண்டு காலம் நிறைவு பெறுகிறது. இன்னும் நதிகளை இணைக்க முடியவில்லை என்றால் யாருக்கு இயலாமை? திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக அல்லது பிரதமர் நரேந்திர மோடிக்கா? என்ற கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன்.
அந்த ரூ15 லட்சம் எங்கே?: அதை தாண்டி வானதி சீனிவாசன், மகளிர் உரிமை திட்டம் அனைத்து பெண்களுக்கும் கிடைக்கவில்லை; கட்டுப்பாடு வைத்திருக்கிறீர்கள்; விதிகள் வைத்திருக்கிறீர்கள் என்றார். எல்லோருக்குமான, பெண்களுக்கான எல்லா மகளிருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் நீங்கள் செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லுகிறார். நல்ல விஷயம்தான். ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் இந்த அவையின் மூலமாக கேட்டுக்கொள்கிறேன், வானதி சீனிவாசன் அவர்களே! எங்கள் அக்கவுண்ட்டில் இந்திய பிரதமர் மோடி ரூ15 லட்சம் தருகிறேன் என்று சொன்னாரே.. அந்த 15 லட்ச ரூபாய் போட்டுவிட்டு பிறகு நீங்கள் இந்த கேள்வியை கேட்டால் இது நியாயமாக இருக்கும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
எடப்பாடிக்கு பதில்: துணிச்சலை பற்றி நம்முடைய முதலமைச்சரை பார்த்து கேட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. எமர்ஜென்சி காலத்தில் சிறை கொடுமைகளை, மிசா சிறை கொடுமைகளை அதை துணிச்சலோடு எதிர் கொண்டவர் நம்முடைய முதலமைச்சர். சிலர் வேறு வகையான குற்றச்சாட்டுகள், வழக்குகள் மூலமாக அரசியலுக்கு நுழைந்தவர்கள் இன்றளவும் அதே போன்ற குற்றச்சாட்டுகள் வழக்குகளொல் சிக்கி இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. இவ்வாறு பரந்தாமன் எம்.எல்.ஏ. கூறினார்.












Click it and Unblock the Notifications