முரசொலி விளம்பரங்களில் என் போட்டோ போடவே கூடாது.... தனக்கு தானே தடாலடி தடை விதித்த உதயநிதி ஸ்டாலின்
சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இடம்பெறும் விளம்பரங்களில் தன்னுடைய படத்தை தவிர்க்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளரும் முரசொலி நிர்வாக இயக்குநருமான உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இதனால் கடந்த சில நாட்களாக முரசொலி விளம்பரங்களில் உதயநிதியின் படம் தவிர்க்கப்பட்டே வெளியிடப்பட்டு வருகிறது.
முரசொலி நாளேட்டில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கான விளம்பரமாக இருந்தாலும் உதயநிதியின் போட்டோ பெரிய சைஸில் இடம்பெற்றிருக்கும். முரசொலி படிக்கும் நடுநிலையாளர்களைகூட இது முகம் சுளிக்க வைக்கிறது என திமுக தலைமைக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஒருவர் இதனை வெளிப்படையாகவே சுட்டிக்காட்டினார். கருணாநிதியின் வாரிசாகவே இருந்தாலும் படிப்படியாக ஒவ்வொரு நிலையாக மு.க.ஸ்டாலின் முன்னேறித்தான் இன்று திமுக தலைவராக உயர்ந்திருக்கிறார். ஆனால் உதயநிதி ஸ்டாலினுக்கான பதவி, விளம்பரங்களில் தரப்படும் அதீத முக்கியத்துவம் அத்தனையும் திணிப்பாகவே பார்க்கப்படுகிறது. இதுதான் திமுகவின் பலவீனம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
திருச்சியில் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்... குறைவான பயணிகள்... தனியார் பஸ்கள் ஓடவில்லை!!
உதயநிதி படம் மிஸ்ஸிங்
இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக முரசொலி நாளிதழில் வெளியிடப்பட்டு வரும் ஒரு விளம்பரத்தில் கூட உதயநிதியின் படம் இடம்பெறவில்லை. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் ஸ்டாலினின் படம் மட்டுமே இந்த விளம்பரங்களில் இடம்பெற்றிருக்கிறது.
உதயநிதி படம் இல்லாத இளைஞரணி விளம்பரம்
இன்றைய முரசொலியில் சென்னை தியாகராயர் நகர் பகுதி திமுக இளைஞர் அணியின் நிகழ்ச்சியின் விளம்பரம் வந்துள்ளது. அதில் கூட இளைஞரணி செயலாளர் உதயநிதியின் படம் கவனமாக தவிர்க்கப்பட்டுள்ளது. அதுவும் உதயநிதியின் ஆதரவாளர்கள் நடத்துகிற நிகழ்ச்சியும் கூட இது.
மூத்த முன்னோடிகள் வரவேற்பு
முரசொலியின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்த போதும் தன்னுடைய படத்துக்கான கட்டுப்பாடுகளை உதயநிதி விதித்திருப்பதை மூத்த முன்னோடிகள் வரவேற்கவே செய்கின்றனர். முரசொலி விளம்பரங்களில்தான் என்று இல்லாமல், பத்திரிகையில் இடம்பெறும் செய்திகளில் கூட தேவை இல்லாமல் தமக்கு முக்கியத்துவம் தரக் கூடாது என்பதையும் கறாராக உதயநிதி கடைபிடித்து வருவதையும் பக்கங்களை புரட்டும் போது புரிந்து கொள்ளவும் முடிகிறது.
திராவிட கல்வியில் ஆர்வம்
அத்துடன் இன்னொரு தகவலையும் திமுக சீனியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அண்மையில் திராவிடர் இயக்கத்தின் வரலாறு, கோட்பாடுகள், சாதனைகள் ஆகியனவற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சொல்வதற்காக திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் திராவிடப் பள்ளி என்ற அஞ்சல்/ இணையவழி கல்வி முயற்சியை முன்னெடுத்தார். இந்த முயற்சிக்கு ஊக்கம் தரும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர் அணியை சேர்ந்த ஒருவரை தேர்வு செய்து, திராவிடப் பள்ளியில் சேருவதற்கான கட்டணத்தையும் உதயநிதியே செலுத்தி இருக்கிறார் என்பதையும் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டுகின்றனர்.