5ஜி ஏலத்தில் முறைகேடு.. ரூ.5 லட்சம் கோடியில், 1.5 லட்சம் கோடி இங்கே! மற்ற பணம் எங்கே? ஆ.ராசா கேள்வி
சென்னை: 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
இந்தியாவில் 5 ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சில மாதங்களுக்கு முன் அனுமதி அளித்தது. இந்த 5 ஜி சேவை கொண்டு வரப்பட்டால், 4 ஜியை விட 10 மடங்கு அதிக வேகத்தில் இணையதள வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கும். இந்தியாவில் 5 ஜி சோதனை சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.

5ஜி ஏலம்
இந்த நிலையில் கடந்த 26ம் தேதி 5 ஜி அலைகற்றைக்கான ஏலம் தொடங்கியது. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் - ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்குகேற்றன. இந்த ஏலத்தின் முதல் நாளன்று, இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரை நிறுவனங்கள் ஏலம் கேட்டனர் என்று கூறப்பட்டது. அதேபோல் கடந்த 2015 ல் நடைபெற்ற 4ஜி ஏலத்தின் சாதனையை முறியடித்து இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

ரிலையன்ஸ் ஜியோ
மொத்தமாக 72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை அரசு ஏலம்விட்டது. இதில் 51.236 மெகாஹெர்ட்ஸ் ரூ.1,50,173 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது. அதில் அதிமபட்சமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 700, 800, 1800, 3300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 24,740 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது.

அதிக தொகை
அதேபோல் மொத்த ஏலத்தொகையான ரூ.1,50,173 கோடியில், அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஏலத்தொகை ரூ.88,078 கோடியாகும். பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஏலத்தொகை ரூ.43,048 கோடி, வோடப்போன் - ஐடியா நிறுவனத்தின் ஏலத்தொகை ரூ.18,799 கோடி, அதானி டேட்டா நெட்ஒர்க்சின் ஏலத்தொகை ரூ.212 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பயனாளர்களின் எண்ணிக்கையை மதிப்பில் கொண்டு 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் ரூ.5 லட்சம் வரை செல்வதற்கு வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் ரூ.1.50 லட்சம் கோடி வரை மட்டுமே சென்றுள்ளது.

ஆ.ராசா குற்றச்சாட்டு
இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், 2 ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு பின் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு நஷ்டம் என்று கூறினார்கள். ஆனால் 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. 5 ஜி அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம்போகும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் ரூ.1.5 லட்சம் கோடிக்கு தான் சென்றுள்ளது. எஞ்சிய பணம் எங்கு சென்றது என்பது பற்றி மத்திய அரசு தான் பதிலளிக்க வேண்டும். 5 ஜி ஏலம் முறையாக நடத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications