‛தமிழ்நாடு’ பெயரை ஏற்காததால் தான் காமராஜரே தோற்றார்..திமுக எம்பி ஆ.ராசா பரபர பேச்சு! சொன்னது என்ன?
சென்னை: காமராஜர் பல அணைகளை கட்டினார். இருப்பினும் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் வைக்கவில்லை. அது அவருக்கு மிகப்பெரிய குறைபாடாக போய்விட்டது.தமிழ்நாடு என்ற பெயரை காமராஜர் ஏற்று கொள்ளாததால் தான் அவருக்கு வீழ்ச்சி தொடங்கியது. அதேபோல் தற்போது தமிழ்நாடு என சொல்ல சிலர் பயப்படுபகிறார்கள். அவர்களுக்கும் வீழ்ச்சி தொடங்கி உள்ளது'' என திமுகவின் துணை பொதுச்செயலாளர் ஆ ராசா பரபரப்பாக பேசினார்.
தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் (கலை பண்பாட்டு இயக்கம்) சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா -இசை சங்கமம் நடந்தது. இதில் திமுகவின் துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ ராசா பங்கேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திராவிடம் குறித்தும், பொங்கல் விழா குறித்தும் விரிவாக ஆ ராசா பேசினார். இந்த கூட்டத்தில் ஆ ராசா பேசியதாவது:

திராவிட மாடல்
திராவிட மாடல் என்பதை உச்சரிக்க முடியாத உதடுகள் இந்த மண்ணில் இருந்து வெளியே ஓட வேண்டிய காலக்கட்டத்தில், ஓடிய காலக்கட்டத்தில் திராவிட பொங்கல் என்ற தலைப்பில் கவிதை நிகழ்ச்சியை தந்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரியது. மகிழ்ச்சிக்குரியது. திராவிடம் என்றால் தமிழ். தமிழ் திராவிடத்தில் உள்ளது.

காமராஜருக்கான பெரிய குறை
காமராஜர் பல அணைகளை கட்டினார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் வைக்க முடியவில்லையே. அது அவருக்கு மிகப்பெரிய குறைபாடாக போய்விட்டது. காமராஜருக்கு எத்தனையே பெருமைகள் என்பது உண்டு. 6 முறை நாடாளுமன்ற உறுப்பினர். காங்கிரஸ் கட்சியின் தலைவர். 2 பிரதமர்களை உருவாக்கியவர். பல ஜனாதிபதிகளை உருவாக்கியவர்.

காமராஜரின் வீழ்ச்சி இதுதான்
காமராஜர் தமிழ்நாட்டு மக்களை நேசித்தவர். பெரியாருக்கு பச்சை தமிழர் என அடையாளம் கொடுத்தவர். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் தமிழ்நாடு என்ற பெயரை ஏற்று கொள்ளவில்லை. அதனால் அவருக்கு வீழ்ச்சி தொடங்கியது. தற்போது தமிழ்நாடு என சொல்ல சிலர் பயப்படுகிறார்கள். அவர்களுக்கும் வீழ்ச்சி தொடங்கி உள்ளது'' என பேசினார்.

முன்பு நடந்தது என்ன?
தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்என் ரவி, ‛‛தமிழ்நாட்டை தமிழகம் என சொல்வதே சரியாக இருக்கும்'' என பேசினார்.ஆளுநர் ஆர்என் ரவியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிராக விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அமைப்புகள், திராவிட கழகத்தினரும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்என் ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், ‛‛காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்". அந்த காலத்தில் 'தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றைப் பண்பாட்டுச் சூழலில் 'தமிழகம்' என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது என விளக்கம் அளித்து இருந்தார். இந்நிலையில் தான் தற்போது ஆ ராசா இப்படி பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications