பொங்கி எழுந்த கனிமொழி.. "இன்னும் எத்தனை நாள் இப்படி பொறுத்து கொள்வது?" ஆயுஷ் அமைச்சகத்துக்கு லெட்டர்
ஆயுஷ் அமைச்சக செயலருக்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: "இன்னும் எத்தனை நாளைக்கு இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை, பொறுத்துக்கொள்ள போகிறோம்? என்று காட்டமான கேள்வியை எழுப்பி அழுத்தமான கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார் திமுக எம்பி கனிமொழி.. மேலும் "இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் எனக்கூறிய ஆயுஷ் அமைச்சக செயலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஆயுஷ் அமைச்சக மந்திரி ஸ்ரீபாட் நாயக்கிற்கு ஒரு கடிதமும் எழுதி, அது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.
Recommended Video
இந்தியாவின் அனைத்து மாநில அரசு துறைகளிலும் பணியாற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான 3 நாட்கள் இணையவழி புத்தாக்க பயிற்சி முகாமை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது.
இந்த யோகா மருத்துவர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆன்லைன் மூலம் நடந்தது.. இதில் இந்தியா முழுவதும் 350-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்... தமிழகத்தை சேர்ந்த 37 பேர் இதில் பங்கேற்றனர்.
பெண்கள் திருமண வயது 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த பரிசீலனை... கனிமொழி எம்.பி. வரவேற்பு
ஹிந்தி மொழி
அப்பொழுது மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா ஹிந்தியில் பேச்சை ஆரம்பித்துள்ளார்... இந்த சமயத்தில் தமிழகத்தை சேர்ந்த டாக்டர்கள் குறுக்கிட்டு ஆங்கிலத்தில் பேசும்படி தெரிவித்துள்ளனர்.. ஆனால் ராஜேஷ் கொடேஜா, "நான் முழுவதும் இந்தியில்தான் பேச போகிறேன்... எனக்கு இங்கிலீஷ் சரளமாக பேச வராது... அதனால் இதை எதிர்பார்ப்பவர்கள் இங்கிருந்து சென்றுவிடலாம்" என்றார்.
சர்ச்சைகள்
இதை கேட்டதும், இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து சென்ற யோகா பயிற்றுனர்கள் ஷாக் ஆனார்கள்.. ஏற்கனவே இந்த டிரெயினிங் முழுக்க ஹிந்தியிலேயே நடந்ததால் தங்களுக்கு எதுவுமே புரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தவர்கள், அமைச்சக செயலாளரே இப்படி சொன்னதும் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இது சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.. ஆந்திரா, தெலங்கானா, கேரள மாநில மருத்துவர்களும் இதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர்.
கண்டனங்கள்
தமிழகத்திலும் டாக்டர் ராமதாஸ், மநீம தலைவர் கமல்ஹாசன் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், திமுக எம்பி கனிமொழியும் இதுகுறித்து ட்வீட் போட்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் திமுக எம்.பி கனிமொழி பதிவிட்டுள்ளதாவது:
இன்னும் எத்தனை நாள்?
"மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில்,இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது... இது கண்டிக்கத்தக்கது... மத்திய அரசு, உடனடியாக அந்த செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்... இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்க படுவதை, பொறுத்துக்கொள்ள போகிறோம்? என்று காட்டமான கேள்வியை எழுப்பி அழுத்தமான கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.
ஆவேச கருத்துக்கள்
"ஹிந்தி படிச்சால்தான் இந்தியனா இருக்கனும்னா அந்த ஹிந்தியே எங்களுக்கு தேவையில்லை" என்று ஏற்கனவே சோஷியல் மீடியாவில் ஆவேச கருத்துக்கள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், கனிமொழியின் இந்த ட்வீட் பெரிதும் வரவேற்பை பெற்று வருகிறது. கனிமொழி ட்வீட்டுடன் நிறுத்தவில்லை.. இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் எனக்கூறிய ஆயுஷ் அமைச்சக செயலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயுஷ் அமைச்சக மந்திரி ஸ்ரீபாட் நாயக்கிற்கு ஒரு கடிதமும் எழுதி உள்ளார்.. இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
பாதுகாப்பு படை
சமீபத்தில்தான், "இந்தி தெரியாதா, நீங்கள் இந்தியர் தானா? என ஏர்போர்ட்டில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கனிமொழியை கேட்டதாக கூறிய சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி விட்டது... பாஜக தரப்பினர் கொதித்தெழுந்து வந்தனர்.. விவகாரத்தை திசை திருப்பவும் செய்தனர்.
விமர்சனங்கள்
"அது எப்படி ஒரு எம்பியை ஏர்போர்ட்டில் நிற்க வைத்து கேள்வி கேட்க முடியும்? திமுகவின் மும்மொழி கொள்கை குறித்த எதிர்ப்புகள் யாவும் மக்களிடம் அவ்வளவாக போய் சென்றடையவில்லை.. இப்படி சொல்வதே, மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான்.. வரப்போகும் தேர்தலுக்காக இந்த விஷயத்தை ஆதாயமாக்கத்தான்" என்று எல்.முருகன் முதல் எஸ்வி சேகர் வரை குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர்.
விஸ்வரூபம்
ஆனால், இப்போது நிலைமையே தலைகீழாகிவிட்டது.. அமைச்சக செயலரே, இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று சொல்லி உள்ள விவகாரம் கவனிக்கத்தக்கதாக மட்டுமல்லாமல், விஸ்வரூபமாகவும் வெடித்து கிளம்பி வருகிறது.