உன் வியர்வையின் ஒரு துளிக்கு ஈடாகுமா என் கண்ணீர்..? ஸ்டாலின் ஜேக்கப் மறைவால் கலங்கிய திமுக எம்.பி!
தன் அத்தனை உழைப்பையும் சுயநலமின்றி என் வெற்றிக்காகத் தந்த பேரன்பை எந்தக் கைமாறால் நான் கரைக்க முடியும் என திமுக எம்.பி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரபல புகைப்படக் கலைஞரும், திமுக செயற்பாட்டாளருமான ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் பிரபலமான 'What A Karwad' உணவு நிறுவனத்தின் இணை நிறுவனரும், பிரபல புகைப்படக் கலைஞருமான ஸ்டாலின் ஜேக்கப், நேற்று இரவு சாலை விபத்தில் காலமானார்.
ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் ஜேக்கப் மரணம்
பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் நேற்று சென்னை மறைமலைநகர் அருகே நிகழ்ந்த விபத்தில் அகால மரணமடைந்தார். ஆன்லைனில் பிரபலமான what a karwad என்ற உணவு நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் இருந்து வந்தார் ஸ்டாலின் ஜேக்கப். திமுக செயற்பாட்டாளரான ஸ்டாலின் ஜேக்கப், நேற்று முன்தினம் தான் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் நேற்று இரவு மறைமலைநகர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஸ்டாலின் ஜேக்கப்
திமுகவில் மிகுந்த பற்று கொண்ட ஸ்டாலின் ஜேக்கப், சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக திமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்ததோடு, திமுக தேர்தல் பிரச்சாரக் களத்திலும் பணிபுரிந்தார். திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டங்களிலும், பிரச்சாரங்களின்போதும் ஸ்டாலின் ஜேக்கப் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன. திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் 2019ல் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டபோது, சமூக வலைதள, களப் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டிருந்தார் ஸ்டாலின் ஜேக்கப்.

அழுதபடி
இந்நிலையில், அவரது மறைவுக்கு திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எப்போதும் சிரித்த முகம், சற்றும் சோர்வில்லாத களப்பணி, சமரசமற்ற கொள்கைப் பிடிப்பு என வலம் வந்த அன்புத் தம்பி ஸ்டாலின் ஜேக்கப்பின் அகால மரணம் இந்த இரவைக் கொடுந்துயராக்கி விட்டது. 'அம்மா - நேற்றுத்தான் பிறந்த நாள் அவருக்கு. இன்று பேசலாமென நானும் நித்திலாவும் இருந்தோம். அதற்குள் இப்படி...' என சரயு அழுதபடி தொலைபேசியபோது உலகமே ஒரிரு கணங்கள் உறைந்து போனதெனக்கு.

எனக்கு பலம் கொடுத்த ஜேக்கப்
என்ன ஏதென விசாரிக்கத் தங்கை கனிமொழி மனோகரனிடம் பேசினால் அவளோ பேச்சற்ற பேரதிர்ச்சியில்... யாரிடத்தில் எதைப் பகிர்ந்து இச்செய்தியைச் செரிக்க... எனது தேர்தல் சமயத்தில் ஸ்டாலின் ஜேக்கப்பின் அயராத பணி எனக்குப் பெரும் பலமாக அமைந்தது.
சரயு, நித்திலாவை அழைத்துக் கொண்டு நேரடியாக அத்தனை தெருக்களையும் 'இதோ இதோ' வென உற்சாகமாகச் சுற்றியதை நினைவு கூறவா.. எனது வெப்சைட் அறிமுகத்தை அழகாகக் குழந்தைகளைக் கொண்டு நடத்தியதை நினைக்கவா...

எந்தக் கைமாறால் கரைப்பேன்
அந்தக் குழந்தைகளில் ஒருவனாகத் தானும் அமர்ந்தபடி சிரித்து மகிழ்ந்த அந்த புகைப்படத்தைத் தேடுகிறேன்... கண்ணீர் சுடுதலின் கலங்கலை மீறி அதில் தம்பியின் சிரிப்பு தெளிவாக எதிரொலிக்கிறது. தன் அத்தனை உழைப்பையும் சுயநலமின்றி என் வெற்றிக்காகத் தந்த அவரது கொள்கைப் பிடிப்பை... பேரன்பை எந்தக் கைமாறால் நான் கரைக்க முடியும்?

என் கண்ணீர்
இளமையில் நேரும் அன்பானவர்களின் அகாலமரணம்
சில ஏன்களையும் எப்படிகளையும் எப்போதும்
தீராச் சுமையாய் நம்மேல் ஏற்றிவைத்து விடுகின்றது
அதன் கனம் தகித்தத் துவங்கும்
இப்பின்னிரவில்
எச்சரிக்கையற்ற நிலச்சரிவாய்
நமை விழுங்குமதை கைபிசைந்து சபிக்கறேன்
ஜேக்கப் தம்பி..
எப்போதாவது தான்
ஒரு புத்தகத்தோடு எனைவந்து சந்திப்பாய்
மாறாத புன்னகையுடன்
ஒரு புகைப்படம் என்னுடன்-
அம்மட்டே உன் ஆசையும்!
என் வெற்றிக்கான
உன் வியர்வையின் ஒரு துளிக்கு
ஈடாகாது என் கண்ணீர்
இருந்தாலும் அது மட்டுமே
இப்போது என்னிடம்." என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தங்கம் தென்னரசு உருக்கம்
ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அன்புத் தம்பி, இனி எப்போது அந்த சிரித்த முகத்தைக் காண்பேன். "ஆரொடு நோகேன்; ஆர்க்கு எடுத்துரைப்பேன்" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications