தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம்
சென்னை: தலைமைச் செயலகத்திலேயே தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள் இணைந்தது கடும் கண்டனத்துக்குரியது என திமுக எம்பி வில்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்துவிட்டு உடனே தலைமைச் செயலகத்தில் இருந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனனை சந்தித்து தவெகவில் இணைந்தனர்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கட்சித் தாவல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மூன்று தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள், கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தப்பிப்பதற்காக, 21 நாட்களுக்குள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தலைமைச் செயலக வளாகத்திலேயே உடனடியாக தவெக கட்சியில் இணைந்துள்ளனர்.

அரசு தலைமைச் செயலக வளாகமும், அறைகளும் ஒரு அரசியல் கட்சியில் இணைவதற்கான இடங்களாக மாறியிருப்பதும், அனைத்து அறநெறிகளும், நடத்தை விதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதும் கடுமையான கண்டனத்திற்குரியது.
தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக இந்த மூன்று தொகுதி மக்களின் மீது இப்போது தேர்தல் கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது; பொதுவாக ஆறு மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டிய மற்றொரு இடைத்தேர்தலால் பெருமளவிலான பொதுப் பணமும் காலமும் வீணடிக்கப்படக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து அவர்கள் மூவரும் தவெகவில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தனர். அப்போது செங்கோட்டையன் உடனிருந்தார்.
இதையடுத்து மூவரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அறைக்குச் சென்றனர். அங்கு அவரை சந்தித்து தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர். மேலும் முதல்வர் விஜய்யையும் அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இன்னும் 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் அதில் இந்த 3 எம்எல்ஏக்களும் விசில் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications