நாடாளுமன்றத்தில் வெடிக்கக் காத்திருக்கும் முக்கிய பிரச்சனை.. திமுக எம்.பிக்களை உடனே அழைத்த ஸ்டாலின்!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 9) திமுக எம்.பி.க்கள் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கவுள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், திமுகவைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நடைபெற உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 09-3-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம் 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
அப்போது, திமுக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். பொருள் : நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவடைந்திருந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு வரும் 13 ஆம் தேதி தொடங்குகிறது.
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி திணிப்பு ஆகிய விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் வெடிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்படும் சூழலில், திமுக எம்.பிக்கள் செயல்பட வேண்டியது பற்றி நாளை நடைபெற உள்ள திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications