Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் பதிவுக்காகவே மல்யுத்தம் நடத்தும் நிலை..பாஜகவை சாடும் முரசொலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற புகாரை பதிவு செய்ய வைப்பதற்கே மிகப் பெரிய மல்யுத்தம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டது பாஜக என திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி சாடியுள்ளது.

இது தொடர்பாக திமுகவின் முரசொலி நாளிதழ் எழுதியுள்ள தலையங்கம்: மல்யுத்த வீராங்கனைகளை பாலியல்ரீதியாகத் துன்புறுத்திய பா.ஜ.க. எம்.பி.மீது வழக்குப் பதியவே மல்யுத்தம் நடத்த வேண்டியதாக இருக்கிறது. பா.ஜ.க. என்பது எந்தளவுக்கு மக்கள் விரோத, பெண்கள் விரோதக் கட்சியாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.கடந்த ஜனவரி 18 ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், சாக்ஷி மல்லிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர்.

DMK Murasoli slams BJP on Wrestlers Protest

பா.ஜ.க.வின் எம்.பி.யான இவர், இந்திய மல்யுத்த கூட்டமைப்புத் தலைவராகவும் இருக்கிறார். பிரிஜ் பூஷண் சிங், பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பதால் மட்டுமே காப்பாற்றப்பட்டார். பிரிஜ் பூஷண் சிங்கும், பயிற்சியாளரும், தேசிய முகாமில் பெண் மல்யுத்த வீரர்களை பாலியல்ரீதியாகத் துன்புறுத்துவதாக வினேஷ் போகட் அழுதுகொண்டே கூறினார். இந்த விவகாரம் பெரிதாக ஆனதும் உடனடியாக அவர் மீது வழக்குப் பதிந்திருக்க வேண்டும். அதனைச் செய்யவில்லை ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஊடகங்களில் இது பெரிதாக ஆனதும், வேறு வழியில்லாமல் ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தார்கள். இந்தக் குழுவை அமைப்பதற்கே ஒருவார காலம் ஆனது. இந்தக் குழுவின் தலைவராக மூத்த குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரி கோம் தேர்வு செய்யப்பட்டார்.

விசாரணையை நான்கு வாரங்களுக்குள் முடிக்குமாறு குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. குழு அமைக்கப்பட்டது ஜனவரி 23 ஆம் தேதி. அப்படியானால் பிப்ரவரி 23 ஆம் தேதிக்குள் குழுவின் அறிக்கை கொடுக்கப்பட்டு நடவடிக்கை பாய்ந்திருக்க வேண்டும். குழு தனது அறிக்கையைக் கொடுத்ததே தவிர, அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை பொதுவெளியில் சொல்லவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டம் நடத்தினார்கள்.

நேரடியாகவே, ஏப்ரல் 21 ஆம் தேதி, பிரிஜ்பூஷண் சிங்குக்கு எதிராக கனாட் பிளேஸ் காவல் நிலையத்திற்கு புகார் செய்ய மல்யுத்த வீராங்கனைகள் சென்றார்கள். ஆனால் போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை என்றும் மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டுகிறார்கள். ஏப்ரல் 23 ஆம் தேதி ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, சாக்ஷி மல்லிக் , வினேஷ் போகட் தலைமையில் மல்யுத்த வீரர்கள் இரண்டாவது முறையாக பிரிஜ்பூஷண் ஷரண் சிங்குக்கு எதிராகக் களமிறங்கினார்கள். அந்தப் போராட்டம்தான் இப்போதும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

DMK Murasoli slams BJP on Wrestlers Protest

இவ்வளவுக்குப் பிறகு நேற்றைய தினம்தான் பா.ஜ.க. எம்.பி.மீது டெல்லி கனோட் ப்ளேஸ் காவல்நிலையத்தில் இரண்டு எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லி காவல் ஆணையர் ப்ரணவ் தாயல் கூறுகையில், "மல்யுத்த வீராங்கனைகள் புகார்மீது இரண்டு எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று சொல்லி இருக்கிறார். இத்தனை போராட்டங்களுக்குப் பிறகுதான் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். இதற்கு முக்கியமான காரணம், நேற்றைய தினம் பிரியங்கா காந்தி அந்த மல்யுத்த வீராங்கனைகளைச் சென்று சந்தித்தார். அதன் விளைவுதான் இந்த வழக்குப் பதிவுகள் ஆகும். இனிமேல் பா.ஜ.க. எம்.பி.யைக் காப்பாற்ற முடியாது என்பதால் கண்துடைப்பாக நடவடிக்கை எடுப்பதைப் போல நாடகம் ஆடி இருக்கிறார்கள்.

எத்தகைய குற்றம் செய்பவர்கள் - செய்தவர்களாக இருந்தாலும் அவர்களை பா.ஜ.க. பொத்திப் பாதுகாக்கும் என்பதற்கு உதாரணமாக இந்த விவகாரம் அமைந்துள்ளது. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மூத்த கிரிக்கெட் வீரர் கபில் தேவ், ஒலிம்பியன் அபினவ் பிந்த்ரா ஆகியோர் இந்த வீராங்கனைகளுக்கு ஆதரவு அளித்துள்ளனர். "நமது விளையாட்டு வீரர்கள் தெருவில் நீதி கோரிப் போராடுவதைப் பார்ப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர்கள் நமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த கடுமையாக உழைத்து நம்மைப் பெருமைப்படுத்தி யவர்கள். ஒரு நாடாக, ஒவ்வொரு நபரின் கண்ணியத்தையும் பாதுகாப்பது நமது பொறுப்பு. அது ஒரு விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி; அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி." என்று ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சொல்லி இருக்கிறார்.

"இப்போது நடப்பது நடந்திருக்கக் கூடாது. இது ஒரு நாசூக்கான பிரச்சனை. இது நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் கையாளப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும். விளையாட்டு வீரர்களாக, சர்வதேச அரங்கில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். ஆனால், இந்திய மல்யுத்த நிர்வாகத்தில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நமது விளையாட்டு வீரர்கள் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்துவது மிகுந்த கவலையளிக்கிறது.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் நான் இருக்கிறேன். இந்தப் பிரச்சினை சரியாகக் கையாளப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். விளையாட்டு வீரர்களின் கவலைகள் கேட்கப்பட்டு, இந்த விவகாரம் நியாயமாகவும் சுதந்திரமாகவும் தீர்க்கப்படவேண்டும்" என்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா சொல்லி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவும் ஜந்தர் மந்தரில் நடக்கும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் மல்யுத்த வீராங்கனை களின் படத்தைப் பகிர்ந்த அவர், "அவர்களுக்கு எப்போதாவது நீதி கிடைக்குமா?" என்று வினவியுள்ளார். மல்யுத்த வீரர் வினேஷ் போகட், 'கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிற விளையாட்டு வீரர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இவை அனைத்துக்கும் பா.ஜ.க. எம்.பி.யின் பதில் என்ன தெரியுமா? கவிதை எழுதிக்கொண்டு இருக்கிறார் அவர். காப்பாற்றுவதற்கு ஒரு தலைமை இருந்தால் கவிதை எழுதலாம் என்பது போல நடந்து கொள்கிறார் பா.ஜ.க. எம்.பி.இந்தியாவின் மானத்தைக் கப்பல் ஏற்றும் நிகழ்வாக மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகள் அமைந்துள்ளன. நடவடிக்கை எடுக்கத் தயங்குவதன் மூலம், பா.ஜ.க.வின் உண்மை முகம் மீண்டும் அம்பலமாகி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+