ஆஹா.. கருத்துக் கணிப்பை நம்பி.. மெத்தனத்தில் எதிர்க்கட்சி கூட்டணி? களத்தில் ஒலிக்கும் "ப" குமுறல்
சென்னை: ஒரு பக்கம் கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வந்து கொண்டிருந்தாலும், களத்தில் "விட்டமின் ப" பாயவில்லை என்பதால் பல தொகுதிகளிலும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பரபரப்பில் உள்ளனர்.
இதற்கு முந்தைய தேர்தலில், தொகுதிகளில் போதிய அளவுக்கு பணம் தரப்படவில்லை என்பதால்தான் தோற்றுப் போனோம் என்பதையும் அவர்கள் மறக்கவில்லை.
இப்போதெல்லாம் தேர்தல் என்பது சேவைக்கான களம் மட்டுமல்ல, அதையும் தாண்டி அதிகம் பணம் செலவிடும் களமாகிவிட்டது. ஒவ்வொரு வேட்பாளரும் பூத் அமைக்கவே நிறைய செலவிட வேண்டியிருக்கிறது.

சுயேச்சைகள் எங்கே?
இதனால்தான் இந்த காலகட்டங்களில் சுயேச்சைகள் வெற்றி பெறுவது இயலாத காரியமாகிவிட்டது. பிற மாநிலங்களில் கூட கணிசமாக சுயேச்சைகள் தேர்வாகிறார்கள். தமிழகததில் சிங்கிள் எம்எல்ஏ கூட சுயேச்சையாக வெல்ல முடியவில்லை. காரணம் பணம்.

இழுபறி நிலை
இப்படியான நிலையில்தான், தேர்தல் நெருங்க நெருங்க வேட்பாளர்களுக்கு கட்சி மேலிடம் பணம் தருவது மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படும். இதில் ஆளும் கூட்டணி அமோகமாக தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணிக்குத்தான் தேர்தல் பணிகளில் பண விஷயத்தில் மட்டும், இழுபறி நீடிக்கிறது.

கருத்துக் கணிப்பு
இரு விஷயங்களால் போதிய அளவுக்கு வேட்பாளர்களிடம் பணம் சென்று சேரவில்லை. எனவே அவர்கள் தங்கள் நிர்வாகிகளுக்கு பணத்தை கை மாற்ற முடியவில்லை. ஒரு விஷயம்.., கருத்துக் கணிப்புகள். அனைத்து கருத்துக் கணிப்புமே திமுக கூட்டணி வெல்லும் எனக் கூறுகிறது. எனவே, பெரிய அளவுக்கு பணத்தை வாரி இறைக்க வேண்டாம் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் கருதுகிறார்களாம். எனவே ஆதரவாளர்கள், உள்ளூர் நிர்வாகிகள் பணம் கேட்டாலும் பெரிதாக கண்டுகொள்ளாமல் அவர்களை தேர்தல் வேலை பார்க்க மட்டும் கவனம் செலுத்த கேட்டுக்கொள்கிறார்களாம்.

வருமான வரி சோதனை
இன்னொரு காரணமும் இருக்கிறது. திமுக வேட்பாளர்கள், நிர்வாகிகளை வருமான வரித்துறை உள்ளிட்ட அனைத்து நிதி சார்ந்த அமைப்புகளும் தீவிரமாக கண்காணிக்கின்றன. உதாரணத்திற்கு, எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடந்தது. ஸ்டாலின் திருவண்ணாமலை தொகுதிக்கு வந்த அதே நேரம், ரெய்டு நடந்தது. இதனால் வேலு இன்று பிரச்சாரத்திற்கே போகமுடியவில்லை. இப்படி வேட்பாளர்கள் பலரும் முடங்கிவிட்டனர்.

கடும் நெருக்கடி
அனைத்து வேட்பாளர்களும் கணக்கு காட்டிதான் பணத்தை செலவிட வேண்டும் என்றால் கூட பரவாயில்லை, ஒரு தரப்புக்கு நெருக்கடியும், இன்னொரு வேட்பாளருக்கு கைகளை அவிழ்த்து விட்டு சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதுதான் பிரச்சினையாக மாறியுள்ளது. எனவே முடிந்த அளவுக்கு தொகுதிகளில் தேர்தல் பணிகளுக்காக பணத்தை இப்போதே ஒதுக்க வேண்டும். அது வேட்பாளர்கள் கைகள் வழியாக நிர்வாகிகளுக்கு செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சி தரப்பு வலியுறுத்திக் கொண்டே இருக்கிறதாம்.

2016 சட்டசபை தேர்தல்
கடந்த சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணி வெல்ல வாயப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் சில கூறின. ஆனால் 1 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் திமுக தோற்றது. இதற்கு காரணம், கடைசி நேரத்தில், திமுக தரப்பு விட்டமின் ப அதிகம் செலவிடாததுதான். சில தொகுதிகளில் மாறும் சிறு அளவு ஓட்டுக்களும் கடைசியில் வேட்டு வைத்துவிடும் என்பதற்கு அது ஒரு உதாரணம்.

இடைத் தேர்தல்கள்
லோக்சபா தேர்தலில் திமுக அலை வீசினாலும், அப்போது நடந்த சட்டசபை இடைத் தேர்தலில் 9 தொகுதிகளில் அதிமுக வெல்ல முடிந்தது. எனவே, கட்சிப் பணி எந்த அளவுக்கு களத்தில் முக்கியம், அதுவும் கடைசி நேரத்தில் முக்கியம் என்பதை திமுக மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் உணர வேண்டும் என்று அடிமட்டத்திலிருந்து குரல்கள் கிளம்பியுள்ளன. கருத்துக் கணிப்பை நம்பி ஏமாற வேண்டாம், மெத்தனமாக இருந்தால் மொத்தமும் போய்விடும் என்கிறார்கள் அடிமட்ட தொண்டர்கள்.

பலே பண வினியோகம்
அதேசமயம், சென்னை உள்பட பல்வேறு தொகுதிகளில் ஆளும் தரப்பு பிரமுகர்கள் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் உள்ளிட்வடற்றை தங்கு தடையின்றி கொடுப்பதாகவும், இதை யாரும் தடுக்கவில்லை என்றும் ஒரு புகாரை எதிர்த் தரப்பு வைக்கிறது. சமீபத்தில் சென்னையில் பண விநியோகம் செய்தது தொடர்பான வீடியோ வெளியானது, பணத்துடன் சிலரைப் பிடித்து போலீஸாரிடம் மக்களே ஒப்படைத்த சம்பவமும் நடந்தது.












Click it and Unblock the Notifications