திமுக எம்.பிக்கள் உடனே சென்னை வரவும்.. அழைப்பு விடுத்த தலைமை.. எடுக்கப்போகும் முக்கிய முடிவுகள்!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றியது. 2004 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து திமுக கூட்டணி க்ளீன் ஸ்வீப் செய்துள்ளது. மத்தியில் மீண்டும் பாஜக, கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ள நிலையிலும், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளது.

அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றார். அன்று இரவே சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அப்போது, பட்டாசு வெடித்தும் மேளதாளங்கள் முழங்கியும் திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
அதைத்தொடர்ந்து, அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில், திமுக உட்பட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 40 எம்.பி.க்கள், அமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரை சந்தித்தார். மாவட்ட வாரியாக வந்து முதல்வர் ஸ்டாலினுக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்ததுடன், முதல்வரின் வாழ்த்துகளையும் பெற்றனர். அப்போது, அந்தந்த தொகுதிகளின் பொறுப்பு அமைச்சர்கள், எம்.பி.க்கள், உடன் வந்தனர்.
காங்கிரஸ் சார்பில் அதன் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், எம்.பி.க்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர், விஷ்ணுபிரசாத், கோபிநாத், ராபர்ட் புரூஸ், விஜய் வசந்த், விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பர்ட் உள்ளிட்டோர் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர். அப்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் இடதுசாரி எம்.பி.க்கள், ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் அவரது கட்சி எம்.பி.யான நவாஸ்கனி, மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்.பியுமான துரை வைகோ மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், நிர்வாகிகளும் முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்நிலையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பிக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. திமுக நேரடியாக 21 தொகுதிகளில் வென்றுள்ள நிலையில், திமுக எம்.பிக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், திமுகவின் லோக்சபா குழு தலைவர், லோக்சபா குழு துணைத் தலைவர் பதவிகளுக்கு எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications