லெப்ட் சிக்னல் போட்டு ரைட்டில் போகுதா.. திமுகவின் "சீக்ரெட்" திட்டம்.. கலக்கத்தில் "எதிர்" கட்சிகள்
திமுகவின் அதிரடி தேர்தல் வியூகங்களை கண்டு எதிர்க்கட்சிகள் மிரண்டு போய் உள்ளதாம்
சென்னை: திமுகவுக்கு பிகே டீம் போல.. உதயநிதிக்கு புது டீம் உருவாகி உள்ளது.. அதாவது திமுகவில் இரு முனைத்தாக்குதல் ஆரம்பமாகி உள்ளதால், அதனை அதிமுக சமாளிக்குமா? அக்கட்சியின் மொத்த வியூகத்தையும் அதிரடியாக தகர்க்க சீக்ரெட் திட்டத்தில் திமுக ஏதேனும் இருக்கிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேர்தல் களை தமிழகத்துக்கு வந்துவிட்டது.. திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் பொறுப்பை பிரசாந்த் கிஷோர் ஏற்றிருப்பதால், அக்கட்சி தலைமை குதூகலமாக உள்ளார்.. அதேசமயம், அந்தக் கட்சியிலுள்ள பல மூத்த தலைகளின் தூக்கத்துக்கு வேட்டு வைத்திருக்கிறது பிகேவின் அதிரடிகள்!
ஐபேக் டீம் சமீபத்தில் கூட தலைமைக்கு ஒரு ரிப்போர்ட் தந்ததிருந்தது.. அதில் எல்லா மாவட்டத்திலும் 40 முதல் 45 வயதுக்குட்பட்ட 2ம் கட்ட தலைவர்களே இல்லை, இது கட்சியின் எதிர்காலக் கட்டமைப்புக்கு மிக ஆபத்தான விஷயம் ஆகும் என்று கூறியிருக்கிறது. அதனால்தான், வரப்போகிற தேர்தலுக்கு ஏறத்தாழ 45 வயதுக்கு மேற்பட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய முடிவாகி உள்ளதாம்.
இந்த முறையாவது திமுக ஜெயிக்க வேண்டுமா.. கொங்கு மண்டலத்தை கொக்கி போட்டு இழுக்க.. பலே ஸ்கெட்ச்!
மூத்த நிர்வாகிகள்
ஏற்கனவே மூத்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்ற புலம்பல்கள் எழுந்த நிலையில், குடும்ப உறுப்பினர்களின் தலையீடு கட்சிக்குள் அதிகமாக இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில்தான், பிகே என்ட்ரி ஆனார்... ஏறத்தாழ இதே சமயத்தில்தான் உதயநிதி இளைஞர் அணி பொறுப்பையும் கையில் எடுத்தார்.
உதயநிதி ஸ்டாலின்
பிரசாந்த் கிஷோர் ஆகட்டும், உதயநிதி ஆகட்டும் 2 பேருக்குமே ஒருசில விஷயங்களில் ஒரே மாதிரியான எண்ணங்கள் உள்ளன.. சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு, புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்பதுதான் இவர்களது அடிப்படை திட்டம்.. ஆனால் இருவருமே அதை வெளிப்படுத்துவதில் வேறு வேறு ரூட்களை போட்டு அதில் சக்ஸஸ் ஆகி வருகிறார்கள். தங்களை மதிக்கவில்லை என்பதால் சீனியர்கள் பிகே மீது கடுப்பாகி உள்ளனர் என்றும், ஸ்டாலின் பேச்சை மீறி உதயநிதி இஷ்டத்துக்கு செயல்படுகிறார் என்றும் 2 பேரின் மீதும் குற்றச்சாட்டுகள் வருவதையும் மறுக்க முடியாது!
புது டீம்கள்
இந்த சமயத்தில்தான், தனக்காக ஒரு புதிய குழுவை களமிறக்கி உள்ளார் உதயநிதி.. அதாவது சட்டசபை தேர்தலுக்கு பிகேவின் வியூகம் ஸ்டாலினுக்காக இருந்தாலும், தனக்கான இடத்தை தக்க வைத்து கொள்வதிலும், கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதிலும் உதயநிதி தனிப்பட்ட முறையில் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளார்.. தனக்காக நியமித்து கொள்ளும் அந்த புது டீமானது, பிரச்சாரம், ஆலோசனைகள், மக்களை வரும் ஐடியாக்கள் உள்ளிட்ட விவகாரங்களை கவனித்துக்கொள்ளுமாம்.
உதயநிதி
இதன்மூலம், இளைஞர்களை பெரும்பாலும் உதயநிதி தன் பக்கம் இழுக்க முடியும், அதன்மூலம் உதயநிதி இமேஜ் உயரும், திமுகவின் செல்வாக்கு பெருகும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, தேர்தல் முடிந்ததும் பிகே ஒப்பந்தம் முடிந்து கிளம்பி சென்றுவிட்டால், அதற்கு பிறகு தனிப்பட்ட முறையில் காலூன்றி கொள்ளவே இவ்வாறு டீம் உருவாக்கி உள்ளாராம் உதயநிதி.
எடப்பாடியார்
ஆக மொத்தம் 2 டீம்கள் திமுகவில் உருவாகி உள்ளது.. இவைகள் அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்துமா என்பதுதான் அடுத்த கேள்வி.. இதற்கு காரணம், ஏற்கனவே திமுகவுக்காக வேலை பார்த்த சுனில் டீம் , இப்போது எடப்பாடியாருக்கு பின்னணியில் உள்ளதாக கூறுகிறார்கள்.. முதல்வரின் சூப்பர் அறிவிப்புகள், மாவட்டங்களில் கள ஆய்வு முதல் மக்களை கவரும் திட்டங்களுக்கு ஸ்கெட்ச் போட்டு தருவது சுனில் டீம் என்ற விஷயமும் கசிந்தவாறே இருக்கிறது.
சுனில்
ஆனால், ஸ்டாலின் போல, எடப்பாடியார் தரப்பு இதை பகிரங்கமாக சொல்லவில்லை.. கடந்த 2016 தேர்தலையொட்டி ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே பயணத்தின் மூளையாக செயல்பட்டது இந்த சுனில் டீம்தான்... கடந்த 2021 தேர்தலுக்கு பிகேவுடன் திமுக அக்ரிமென்ட் போடவும், அங்கிருந்து சுனில் வெளியே வந்து அதிமுகவுடன் இணைந்ததாக சொல்கிறார்கள்... இவரை யாரும் அறிவிக்க வேண்டிய தேவையே கிடையாது.. ஸ்டாலினுடன் இருந்தபோது எப்படி வேலை செய்தாரோ, அதுபோலவே எடப்பாடியாருடன் கைகோர்த்து வேலை செய்வார்கள் என்கிறார்கள். இதற்காகவே சென்னை அண்ணாநகரில் ஒரு ஆபிஸ் போட்டு வேலை நடக்கிறதாம்.
சீக்ரெட்கள்
எனினும் 10 வருஷமாக ஆட்சியை பிடிக்க முடியாத நிலையில், வரப்போகும் தேர்தலில் எப்படியாவது முதல்வர் சீட்டை பிடித்து விட வேண்டும் என்ற தீவிரத்தில் ஒன்றுக்கு இரண்டாக களமிறங்கியுள்ள திமுகவை, அதிமுக சரிக்கட்டுமா? அதாவது பிகேவை சுனில் சமாளிப்பாரா? என்பது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. திமுக என்ன பிளான் போட்டாலும் சரி, எத்தனை டீம் களம் இறங்கினாலும் சரி, எந்த சீக்ரெட் வியூகமாக இருந்தாலும் அதை தகர்த்து விட்டு மேலே போவார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!