திருவாரூர் இடைத் தேர்தலை சந்திக்க ஸ்டாலினுக்கு பயம்.. வைகை செல்வன் தாக்கு
சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலை சந்திப்பதற்கு திமுக பயப்படுகிறது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வைகைச்செல்வன் கூறியதாவது: திருவாரூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை, சந்திக்காமல் தவிர்ப்பதற்கு திமுக முயற்சி செய்து வருகிறது.
திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட்டை சேர்ந்த, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா, இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அதில், திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் முன்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதையே ஸ்டாலின் கூட கோரிக்கையாக முன் வைத்துள்ளார். இதன்மூலம் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயம் திமுக தலைவருக்கு இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
ஒரு தொகுதியில் தேர்தல் அறிவித்த பிறகு அதை சந்திப்பதுதான் ஜனநாயக கடமை. அதை தவிர்த்து விட்டு தேர்தலை தவிர்க்க ஆசைப்படுகிறார் ஸ்டாலின். எனவேதான் ஒவ்வொரு காரணமாக தேடிக் கொண்டு உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திருவாரூர் இடைத் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டால் அது நாடாளுமன்ற தேர்தலிலும் தங்கள் கட்சியை வெகுவாக பாதிக்கும் என்ற பயத்தினால்தான் தேர்தலை சந்திப்பதற்கு ஸ்டாலின் அச்சப்படுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.