ஆர்ப்பாட்டம் இது ஆர்ப்பாட்டம்! ஆளுநர் மாளிகை அருகே குவிந்த திமுக எம்பிக்கள்! எம்எல்ஏக்கள்!
சென்னை: பொது பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் தமிழகத்தை வஞ்சித்துவிட்டதாக மத்திய பாஜக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் தொடங்கியது. சென்னை ஆளுநர் மாளிகை அருகே நடந்து வரும் ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பிக்கள், திமுக எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச் சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வையும் மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே இருக்க வேண்டும்.

ஆனால் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாக தெரியவில்லை. மாறாக, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்கிட வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா.ஜ.க. ஒன்றிய அரசைக் கண்டித்து வருகிற ஜூலை 27, சனிக்கிழமை, காலை 10 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.
மாவட்டக் கழக நிர்வாகிகள் - கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்து, தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தத்தமது மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்த விவரத்தை தலைமைக் கழகத்திற்கு உடனே தெரிவித்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவினர் குவிந்தனர். சென்னை ஆளுநர் மாளிகை அருகே திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்களும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எம்பி தயாநிதி மாறனும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்.
மத்திய பட்ஜெட்டானது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் கடந்த 23 ஆம் தேதி 7ஆவது முறையாக தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் பொதுவாக புறநானூறு அல்லது திருக்குறள் குறித்து மேற்கோள்காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவார். ஆனால் இந்த முறை தமிழகம், தமிழ்நாடு குறித்து பட்ஜெட் உரையில் எந்த வார்த்தைகளும் இல்லை.
பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து காட்டமாக விமர்சித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாட்டை புறக்கணிக்கும் மத்திய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதே சரியாக இருக்கும். தமிழ்நாட்டு மக்களை பட்ஜெட்டில் புறக்கணித்ததால் டெல்லியில் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன் என்று அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications