9 முறை பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியும் பலனில்லை! திமுக எடுத்த அதிரடி முடிவு!
சென்னை: இலங்கை கடற்படை அட்டூழியத்தை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள திமுக, வரும் 11ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர், 534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் குறித்தும் மீனவர் நலன் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளதோடு, பிரதமருக்கு 9 கடிதங்களும், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு 35 கடிதங்களும் எழுதியுள்ளார்.

ஆனாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனையை ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கையாண்டு வருகிறது; இலங்கை அரசின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து வரும் 11.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் இராமேஸ்வரத்தில், கழக மீனவரணி செயலாளர் திரு.ஜோசப் ஸ்டாலின் ஒருங்கிணைப்பில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தலைமையில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறுகிறது.
ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும்படி நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மீனவர் சங்கங்களை அந்தந்த கழக மாவட்டச் செயலாளர்கள் திரட்டி ஆர்ப்பாட்டத்தை பெரும் வெற்றியடையச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications