வட மாநிலத்தவர்கள் வேலை தேடி தமிழகம் வர மோடியே காரணம் - திமுக பாய்ச்சல்!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் லட்சணத்தால் தான் பீகார், உத்தர பிரதேச சகோதரர்கள் வேலை தேடி தமிழகத்தை நோக்கி வருகிறார்கள் என்று திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து ராஜீவ் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "தமிழக முதல்வர் ஸ்டாலின் பாடலிபுத்திரம் போய் இந்தியர்களாக ஒன்றிணைந்து நாட்டைக் காப்போம் என்கிறார். ஆனால், வெறுப்புப் பேச்சால் வளர்ந்து, வெறுப்புணர்வைத் தூண்டி நாட்டின் பிரதமரான மோடியோ, ஐ.நா-வில் தமிழைப் பேசுகிறேன். உலகமெல்லாம் திருக்குறளை எடுத்துச் செல்கிறேன் என வெளி வேஷம் போட்டுவிட்டு, பீகார் தேர்தல் களத்தில் தமிழையும், தமிழர்களையும் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். இது வெறுப்பின் உச்சம் அல்லாமல் வேறென்ன.

பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் லட்சணம் தான் பீகார், உத்தரப் பிரதேச சகோதரர்கள் வேலை தேடி தமிழகத்தை நோக்கி வருகிறார்கள். தமிழகமும் அவர்களை தாய் வீடு போல அடைக்கலம் கொடுத்து வந்தாரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் வெறுப்பின் மூலம் தேர்தல் களத்தில் வென்றிருக்கலாம். ஆனால் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற தத்துவார்த்த அடிப்படையில் வாழும் தமிழர்கள் மனதை ஒருபோதும் வெல்ல முடியாது" என்று ராஜீவ் காந்தி கூறியுள்ளார்.
பீகார் சட்டசபைக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், பீகாரின் முசாபர்பூர் பகுதியில் பிரதமர் மோடி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, தமிழ்நாட்டில் வசித்துவரும் பீகாரை சேர்ந்த உழைக்கும் மக்களை திமுகவினர் துன்புறுத்தி வருவதாக குற்றம்சாட்டிப் பேசினார்.
பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் தமிழர்களுக்கும், பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும் அற்ப அரசியல் இது என்று விமர்சித்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்தக் பேச்சு குறித்து தமிழக அரசியல் கட்சியினர் பலரும் விமர்சித்து வருகின்றனர். அதற்கு பாஜகவினர் பதில் கொடுத்து வருஇன்றனர். இதனால் அரசியல் களத்தில் விவாதங்கள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications