தலித்துகளை புறக்கணிக்கிறோமா.. எச்.ராஜா வீட்டுக்கு ஓடி போய் ஆசி வாங்கியவர்தானே முருகன்.. திமுக சுளீர்
சென்னை: "தலித்துகளை திமுக புறக்கணிக்கிறது என்று எப்படி எல்.முருகன் சொல்லலாம்? முருகனை எத்தனை பாஜக தலைவர்கள் வந்து நேரில் வந்து பார்த்திருக்காங்க? வாழ்த்து சொல்லி இருக்காங்க? எச்.ராஜா வீட்டுக்கு இவர்தானே ஓடிப்போய் ஆசியும், வாழ்த்தும் வாங்கிக்கிட்டார்? பாஜகவின் வானதி சீனிவாசன், நாராயணன், ராகவன், இப்படி யராவது இவரை நேரில் வந்து சந்தித்து இருக்காங்களா? திமுக எந்த காலத்திலும் தலித்துகளை புறந்தள்ளியதே கிடையாது" என்று உறுதிபட தெரிவிக்கிறார்கள் உடன்பிறப்புகள்!
கோவை மாவட்டம் கிணத்துக்கிடவில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "திமுகவின் உட்கட்சியில் சத்தியவாணி முத்து முதல் இப்போது ஆ.ராசா வரை பட்டியல் இனத்தவர்கள் முக்கிய பதவிகளுக்கு வர முடியாமல் இருக்கிறார்கள்.. பட்டியல் இனத்தவர்கள் புறக்கணிக்கப்படும் வரலாறு உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
திமுக
இந்த பேச்சுதான் தற்போது திமுகவில் கடுப்பை ஏற்படுத்தி வருகிறது.. ராசாவுக்கு பதவி தந்தும் இப்போது எல்.முருகன் ஏன் இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கிறார்? காலங்காலமாகவே திமுக இப்படித்தான் அச்சமூகத்தை புறக்கணித்து வருகிறதா? இதன்மூலம் திமுகவுக்கு முருகன் என்ன சொல்ல நினைக்கிறார் என்றெல்லாம் விளங்கவில்லை. எனினும் முருகனின் இந்த கருத்து திமுகவின் சில முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:
சத்தியவாணி முத்து
"அண்ணா ஆட்சி அமைக்கிறார்.. 8 பேர் கொண்ட விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குதான் அமைச்சரவை அமைகிறது.. நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த முத்துசாமி, வன்னியர் சமுதாயத்தை கோவிந்தசாமி, இவர்களுடன் தலித்தை சேர்ந்த சத்தியவாணி முத்துவுக்கும் பொறுப்பு தரப்பட்டது.. எடுத்த எடுப்பிலேயே குறுகிய அமைச்சரவையில் இந்த சமுதாயத்துக்கு முக்கியத்துவம் தந்தது அண்ணாதான்.. சத்தியவாணி முத்து ஒரே பெண் அமைச்சர் அப்போது.. ரொம்ப வருஷமா அமைச்சராகவே இருந்தவர்.
தங்கவேல்
1989-ல் வைகோ பரிந்துரைத்தார் என்பதற்காக தங்கவேலுக்கு கருணாநிதி பதவி தரவில்லையா? ஏன் பரிதி இளம்வழுதிக்கு மக்கள் தொடர்பு துறை பதவியை தரவில்லையா? அவ்வளவு வேணாம்.. இன்றைக்கு நன்றியை மறந்து பாஜக பக்கம் சாய்ந்துள்ள அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த இதே விபி துரைசாமிக்கு கலைஞர் செய்யாததா? துணை சபாநாயகர் ஆக்கினாரே.. எம்பி ஆக்கினாரே.. இதெல்லாம் நன்றி மறக்கலாமா?
திமுக
இப்போகூட இதே சமுதாயத்தில் 2 துணை பொதுச்செயலாளர்களை ஏன் திமுக நியமனம் செய்யணும்? இதனால ஏற்கனவோ கட்சிக்குள் நாடார்கள், முதலியார்கள் கொந்தளித்து போய் இருக்காங்க தெரியுமா? இந்த அதிருப்தி நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கவே செய்யும்.. அது வேற விஷயம்.. அந்த அளவுக்கு பிற சமுதாயத்தினரின் கோபம் இருந்தாலும், திமுக தலைமை, 2 துணை பொதுச்செயலாளர் பதவிகளை கவுரவிக்கவில்லையா?
கட்சிக்காரர்கள்
காட்டுமன்னார்குடி இளையபெருமாள் காங்கிரஸ் தீவிர கட்சிக்காரர்தான்.. தலித்தான்.. அது ரிசர்வ் தொகுதி என்பதால், அங்கே இளையபெருமாள்தான் எப்போதுமே தேர்தலில் நின்று வெற்றி பெறுவார்.. அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கவர்.. ஆனால், "என்னுடைய சம்பந்தி இளையபெருமாள் அவர்களே"... என்று கலைஞர் மேடையிலேயே சொல்வார்.. அப்படி சொல்லும்போது, இளையபெருமாள் விழுந்து விழுந்து சிரித்துவிடுவார்.. கலைஞர் இப்படி உறவுமுறை சொல்லி யாரையுமே அழைத்து கிடையாது.. இதெல்லாம் வரலாறு இல்லை என்று சொல்லுமா?
தலித் சமுதாயம்
நாங்க ஒன்னு கேட்கறோம்.. ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நடந்து இல்லையா? அப்போ ஏன் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஜனாதிபதியை விழாவுக்கு கூப்பிடல? அவரை நீங்கதானே நியமனம் செய்தீங்க? விழாவுக்கு கூப்பிட்டிருக்கணுமா இல்லையா? அகில இந்திய அளவில் எந்த தலித்துக்காவது பொறுப்பை இவர்கள் தந்திருக்காங்களா?
வரலாறு என்ன?
இப்போ வந்த முருகனுக்கு எல்லாம் என்னங்க வரலாறு தெரியும்? இவரை எத்தனை பேருக்கு தெரியும்? இவர் மாநில அளவில் பொறுப்பை ஏத்துட்டு இருக்கார்... ஆனால், முருகனை எத்தனை பேர் நேரில் வந்து பார்த்திருக்காங்க? வாழ்த்து சொல்லி இருக்காங்க? எச்.ராஜா வீட்டுக்கு இவர்தானே ஓடிப்போய் ஆசியும், வாழ்த்தும் வாங்கிக்கிட்டார்? பாஜகவின் வானதி சீனிவாசன், நாராயணன், ராகவன், இப்படி யராவது இவரை நேரில் வந்து சந்தித்து இருக்காங்களா? இல்லை மூத்த தலைவர்கள் சிபிஆர், பொன்னார், சு.சாமி போன்றவர்கள்தான் தேடி வந்து பேசியிருக்காங்களா?
கருணாநிதி
கலைஞரை இந்த விஷயத்தில் ஒரு குறையும் சொல்லவே முடியாது.. மறைந்த கருணாநிதி உள்ஒதுக்கீடு விஷயத்தில் எவ்வளவு செய்திருப்பார் என்பதை இந்த தமிழகம் அறியும்.. அவரை மாதிரி எல்லா கட்சிகளுக்கும் ஒதுக்கீடு செய்தது யாருமே கிடையாது.. திமுகவின் அதிகார பொறுப்புகளில் ஒடுக்கப்பட்ட பிரிவினர், மகளிர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம் ஒப்பீட்டளவில் பாராட்டக்கூடியது.. துணை பொதுச்செயலாளர், மாவட்ட துணைச்செயலாளர் போன்ற பொறுப்புகளில் தலித் சமூகத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பு, பிற கட்சிகளில் பின்பற்றப்படாத ஒரு புரட்சிகர ஜனநாயக நடவடிக்கை..
விசிக
இப்போது கூட, கொங்கு மண்டலம் திமுக மீது செம கடுப்பில் இருக்கிறது. 10 வருஷமாக திமுக ஆட்சியில் இல்லாமல் போனதற்கு காரணமே கொங்கு வாக்கு சரித்துதான்.. விசிகவுடன் கூட்டணியை முறித்துவிட்டால், நிச்சயம் திமுக ஜெயிக்கும்.. ஆனாலும் தலித் மீதுள்ள முக்கியத்துவத்தினால்தானே இப்போது வரை விசிக கூட்டணியில் இருக்கிறது.. அதனால் வரலாறு தெரியாமல் முருகன் எதையும் பொத்தாம் பொதுவாக பேசிவிட கூடாது" என்றனர்.