திமுக எடுத்த முக்கிய முடிவு.. பிப்ரவரி 22 முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. வெளியான அறிவிப்பு
சென்னை: திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் எனக் கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை வைக்கும் நிலையில், இது தொடர்பாக திமுக தலைமை அறிவித்துள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி முதல் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு தோழமை கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் என்று திமுக தலைமையில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் எனத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைமையுடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார்.

இதற்கிடையே தொடர்பாக திமுக தலைமை அறிவித்துள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி முதல் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு தோழமை கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களப்பணிகளில் கழக உடன்பிறப்புகள் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்த நடவடிக்கை நிறைவடைந்திருக்கிறது. இதற்காக, மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்றச் சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், பகுதி-நகர-ஒன்றியக் கழகச் செயலாளர்கள்-நிர்வாகிகள், சார்பு அணியினர், வாக்குச்சாவடி முகவர்கள் குழுவினர் என லட்சக்கணக்கானோர், கடந்த சில வாரங்களாகத் தீவிர பணியாற்றி வந்துள்ளனர்.
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை, 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி', மேற்கு மற்றும் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு டெல்டா மற்றும் தெற்கு மண்டல மகளிரணி மாநாடு என வெற்றிக்கனி பறிப்பதற்கான அடிப்படைப் பணிகளை அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறார்கள். இனி வரும் நாட்களில் வீடு வீடாக, வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரையை, மகளிர் படை மேற்கொள்ளவிருக்கிறது.
மேலும், வாக்குச்சாவடி குழுவினருக்கு நான்கு பயிற்சி மாநாடுகள், திருச்சியில் 'ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்' மாநாடு என இடைவிடாத களப் பணிகள் ஒரு புறமும், திராவிட மாடல் அரசின் மூலம் அடுக்கடுக்கான நலத்திட்டங்களின் அமலாக்கம் மறுபுறமும் ஒவ்வொரு நாளும் நடந்து வருகின்றன.
தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்து வருகின்றனர். இதுவரையிலும் 75,000 கோரிக்கைகளும் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன.
வரும் 17-ம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. திமுக தலைவரால் விரைவில் அமைக்கப்படவுள்ள திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவானது சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன், பிப்ரவரி 22-ம் தேதி முதல் தோழமை கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications