பழசை மறக்காதீங்க.. சக்கரம் சுற்றுது! ஆணவம் வேண்டாம்.. திமுகவுக்கு வார்னிங் கொடுத்த எடப்பாடி
சென்னை: இன்று 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் இதே திமுக ஒரு கட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் இருந்ததை மறந்துவிட வேண்டாம். இதை மறந்து பேசக்கூடாது. சக்கரம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. ஆணவம் வேண்டாம் என்று இன்று உண்ணாவிரத போராட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசினார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ நடவடிக்கை கோரியும் மற்றும் சட்டசபையில் இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க கூடாது என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திமுக அரசை கண்டித்தும் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மக்களை பற்றி கவலைப்படாத அரசு திமுக அரசு. மக்கள் கேள்வி கேட்பார்கள் என்று கருதி தான் இப்போது வரை அவர் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை. கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுவிட்டது.
ஜெயலலிதா ஆட்சியில், எனது ஆட்சியில் காவல்துறை நிர்வாகம் சுதந்திரமாக செயல்பட்டது. ஆனால் இப்போது அப்படியல்ல. எல்லாத்தையும் அடக்கி, ஒடுக்கி ஆண்டுக்கொண்டு இருக்கிறார்கள். கருத்து சுதந்திரமே கிடையாது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எப்போது தொடங்கப்பட்டதோ அப்போதே கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டது. எதிக்கட்சிகளை பேசவிடாமல் அடக்கி ஒடுக்க நினைக்கிறார்கள்.
சிபிசிஐடி விசாரணை நடந்தால் உண்மை குற்றவாளிகளை தப்பிக்க விட்டுவிடுவார்கள். உண்மை வெளிவராது. மாநில கட்டுப்பாட்டில் சிபிசிஐடி உள்ளதால் உண்மை வெளிவராது. குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள். சட்டப்பேரவை தலைவர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அவர் அப்படி செயல்படவில்லை. அமைச்சர்களிடம் பதில் கேட்டால் அதற்கும் சபாநாயகரே பதில் சொல்கிறார். சட்டப்பேரவை தலைவர் நடுநிலையுடன் செயல்படாதது வருத்தம் அளிக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் கள்ளக்குறிச்சியே கண்ணீரில் மிதக்கிறது. மொத்த நாடும் இந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. இன்றைக்கு 40க்கு 40 வெற்றி பெற்றுவிட்டோம் என்பதாலும், அனைத்திலும் அதிமுக தோல்வியடைந்துவிட்டதால் இப்படி பொறாமையில் நாங்கள் வெளிநடப்பு செய்வதாக சொன்னார்கள்.
இதே திமுக ஒரு கட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் இருந்ததை மறந்துவிட வேண்டாம். இதே நிலை அன்று உங்களுக்கு இருந்தது. இதை மறந்து இப்படி பேசக்கூடாது. சக்கரம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. ஆணவம் வேண்டாம். திமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளும் கள்ளக்குறிச்சி பற்றி மவுனம் காப்பது அதிர்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications