மரியாதையே இல்ல.. எம்எல்ஏ மீது பறந்த புகார்! கண்டுகொள்ளாத தலைமை.. ஆப்சென்டான தங்க தமிழ்ச்செல்வன்
சென்னை: மிகுந்த அப்செட்டில் இருக்கிறாராம் தேனி எம்பியும், திமுக தேனி வடகு மாவட்ட செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன். பொது மேடையில் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்ட எம்எல்ஏவை கண்டிக்க வேண்டும் என கட்சி தலைமையிடம் சொல்லியும் நடவடிக்கை எடுக்காததால், சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார். தற்போதைக்கு அது தான் தேனி திமுகவில் ஹாட் டாபிக்.
டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தவர் தேனி தங்க தமிழ்செல்வன். தென் மாவட்டங்களில் அதிமுகவில் மிக முக்கிய புள்ளிகளில் ஒருவர். பல ஆண்டுகளாக ஓரம் கட்டப்பட்டிருந்த அவர் 2016 ஆம் ஆண்டு மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி உடைந்த நிலையில் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அதற்குப் பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெரிய அளவில் பேசப்படாத நிலையில், திமுக தரப்பில் தஞ்சம் புகுந்தார்.

திமுக தேனி
அதிமுகவை எதிர் கொள்ள தேனியில் நம்பகமான ஆளைத் தேடிக் கொண்டிருந்த திமுகவும் தங்க தமிழ்ச்செல்வனை அரவணைத்துக் கொண்டது. கடந்த 2021 தேர்தலில் தங்க தமிழ்ச்செல்வன் தோல்வியடைந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தேனி வடக்கு மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். கட்சியின் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக வளம் வந்த அவர் தனது கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள சென்றார்.
தங்க தமிழ்ச்செல்வன்
இதனால் அந்த பகுதி திமுக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் நிகழ்ச்சியில் தொடக்க விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் கலந்து கொண்டார். மேடையில் எம்பி என்ற முறையில் தங்க தமிழ்ச்செல்வனும் கலந்து கொண்ட நிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
எம்எல்ஏ தகராறு
இருவரும் ஒருமையில் பேசிக்கொண்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இதை அடுத்து மாவட்ட செயலாளர் என்ற முறையில் தன்னை மதிக்கவில்லை, எம்பி என்ற முறையிலும் தன்னை மதிக்கவில்லை என மகாராஜன் மீது திமுக தலைமைக்கு புகார் அனுப்பினார் தங்க தமிழ்ச்செல்வன். ஆனால் ஆண்டிப்பட்டிக்கும் கம்பம் பகுதி மாவட்ட செயலாளரான தங்க தமிழ்ச்செல்வனுக்கும் சம்பந்தமே இல்லை. எல்லா நிகழ்ச்சிகளிலும் அவரே கலந்து கொண்டால் நாங்கள் எப்படி உள்ளூர் அரசியல் செய்வது என மகாராஜன் கட்சி தலைமையிடம் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்
இந்த நிலையில் சென்னை அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து இருக்கிறார். டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர், நேற்று வரை சென்னையில் தான் இருந்தார். அதற்குப் பிறகுதான் மதியம் தேனிக்கு சென்றதாக கூறப்படுகிறது. தன்னை அவதூறாக பேசிய எம்எல்ஏ குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, குறைந்தபட்சம் விசாரணையாவது நடத்தி இருக்கலாம் என தங்க தமிழ்ச்செல்வன் அதிருப்தியில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே சென்னையில் இருந்த போதும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என கூறுகின்றனர் தேனி திமுகவினர்.












Click it and Unblock the Notifications