ஈரோடு கிழக்கு தொகுதி- காங்கிரஸுக்கு கடைசிநேரத்தில் கைவிரிக்கிறதா திமுக? அவர்தான் வேட்பாளராம்!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸுக்கு பதில் திமுகவே களமிறங்குவது தொடர்பாக தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக சார்பில் வேட்பாளர் யார் என்பது தொடர்பாகவும் அக்கட்சித் தலைமை ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது.
2008-ம் ஆண்டு தொகுதிகள் மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்டது ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி. இதுவரை 3 தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறது இத்தொகுதி.

2011-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் தேமுதிகவின் சந்திரகுமார் 69,166 வாக்குகள் பெற்றார். தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் மூத்த தலைவர் முத்துசாமியை 10,614 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2016-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அத்தேர்தலிலும் சந்திரகுமார் போட்டியிட்டு 57,085 வாக்குகளைப் பெற்றார். பின்னர் சந்திரகுமார் திமுகவில் இணைந்தார்.
2021-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளராக தந்தை பெரியாரின் கொள்ளு பேரனாகிய, மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன், திருமகன் ஈவெரா போட்டியிட்டார். அதிமுக கூட்டணியில் தமாகாவின் யுவராஜா போட்டியிட்டார். இருவருக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. திருமகன் ஈவெரா 67300 வாக்குகளையும் யுவராஜா 58396 வாக்குகளையும் பெற்றார். 8904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வென்றார்.
இந்நிலையில் அண்மையில் திடீர் மாரடைப்பால் திருமகன் ஈவெரா காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது திருமகன் ஈவெரா மறைவால், ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் இயல்பாகவே, காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் இத்தொகுதி ஒதுக்கப்படலாம் என்கிற கருத்து நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூட மீண்டும் போட்டியிடக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லோக்சபா சீட் தருவதாக உறுதியளித்துவிட்டு திமுகவே அத்தொகுதியில் களமிறங்கலாம் என திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுக தலைமை படுதீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறதாம். மேலும் திமுக ஆட்சி அமைத்த பின்னர் நடைபெறும் முதலாவது இடைத்தேர்தல் இது. இத்தேர்தல், தங்களுக்கான முதல் தேர்வு என கருதுகிறதாம் திமுக தலைமை. அதனால் காங்கிரஸ், ஈவிகேஎஸ் இளங்கோவனை சமாதானப்படுத்துகிற பேச்சுகள் நடத்தப்பட்டு வருகிறதாம்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒப்புக் கொள்ளும் நிலையில் திமுகவின் வேட்பாளர்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறதாம். திமுகவைப் பொறுத்தவரையில் முதல் சாய்ஸ், அத்தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த விசி சந்திரகுமார்தானாம். சந்திரகுமாருக்கு தனிப்பட்ட செல்வாக்கு இத்தொகுதியில் இருக்கிறதாம். அத்துடன் ஆளும் திமுக ப்ளஸ் காங்கிரஸ் வாக்குகள் என எளிதான வெற்றியை அறுவடை செய்து கொள்ளலாம் என கணக்குப் போடுகிறதாம் திமுக தலைமை.












Click it and Unblock the Notifications