தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
சென்னை: தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் மாலை 6 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவம்பர் மாதம் தொடங்கியது. இதையடுத்து தமிழகத்தில் வீடு வீடாக விண்ணப்ப படிவங்களை வாக்கு மைய நிலை அலுவலர்கள் வழங்கினர்.

இந்த விண்ணப்ப படிவங்களை நிரப்பி திருப்பி அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கால அவகாசம் டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. பின்னர் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 14 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என தமிழக வாக்காளர்கள் பட்டியலில் இருந்து 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் இந்த பணியை திமுக ஆரம்பத்திலேயே எதிர்த்து வந்தது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் திமுக மாவட்டச் செயலாளர்களுடன் வீடியோ மூலம் இன்று மாலை 6 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.












Click it and Unblock the Notifications