7ஆக பிரிச்சிடுங்க.. இனிமேலும் யாரும் "தாவ" கூடாது.. சென்னையில் புதிய பிளானை களமிறக்கும் திமுக!
சென்னை: திமுக மூத்த தலைவர்கள் சிலர் வரிசையாக பாஜகவில் இணைந்து வரும் நிலையில் சென்னையில் புதிய அரசியல் திட்டம் ஒன்றை திமுக தலைமை இறக்க உள்ளது என்று தகவல்கள் வருகிறது. கட்சியின் உள்வட்டாரங்கள் இது தொடர்பான ஆலோசனைகளை செய்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் பாஜக தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேசி, ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க. செல்வம் திமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்தார். இவர் பாஜகவோடு நெருக்கமானதை அடுத்து, திமுகவில் இருந்து இவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
திமுக கட்சியில் இருந்து இப்படி இவர் நீக்கப்பட்டாலும், தொடர்ந்து இவர் எம்எல்ஏவாக தொடர்வார். அதேபோல் திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த விபி துரைசாமி பாஜகவில் இணைந்து அதன் மாநில துணை தலைவரானார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா... 6 மாதத்திற்கு பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சி...!
தேர்தல் ஏன்
இந்த நிலையில் இப்படி மூத்த தலைவர்கள், திமுகவிற்கு டிமிக்கி கொடுத்த நிலையில் சென்னையில் மேலும் திமுக தலைகள் யாரும் அதிருப்தி தலைவர்களாக மாற கூடாது, பாஜகவிற்கு செல்ல கூடாது, அல்லது நெருக்கமாக கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது. 2021 தேர்தலுக்கு தயாராக வேண்டும். இப்படிப்பட்ட நேரத்தில் முக்கிய மாவட்ட செயலாளர்களை, எம்எல்ஏக்களை இழந்தால் அது சரியாக இருக்காது. அதனால் உறுதியான சில மாற்றங்களை சென்னை போன்ற சில மாவட்டங்களில் கொண்டு வர வேண்டும் என்று திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
காரணம்
திமுகவில் இருந்த கு.க செல்வம் கட்சிக்கு எதிராக திரும்பியதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது மாவட்ட செயலாளர் போஸ்டிங்தான். சென்னை மேற்கு தொகுதியின் மாவட்ட செயலாளர் பதவிக்கு கு.க செல்வம் அடிபோட்டர். ஜெ. அன்பழகன் மறைவிற்கு பின் அந்த பதவி தனக்கு கிடைக்கும் என்று அவர் நினைத்தார். ஆனால் அவருக்கு அந்த பதவியை திமுக வழங்கவில்லை. இதனால் அவர் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்துள்ளார்.
சென்னை எப்படி
திமுகவை பொறுத்தவரை சென்னையை நான்காக பிரித்து நிர்வகித்து வருகிறார்கள். திமுக கட்சி பதவிக்காக சென்னையை நான்கு நிர்வாக மாவட்டமாக பிரித்துள்ளனர். இதற்கான மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இந்த நிலையில்தான் சென்னையை மொத்தம் 7 நிர்வாக மாவட்டமாக பிரிக்க திமுக திட்டமிட்டுள்ளது என்கிறார்கள். முக்கிய தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் 7 பிரிவாக சென்னையை பிரிக்க உள்ளனராம்.
என்ன சொல்கிறார்கள்
கடந்த சில நாட்களாக இது தொடர்பாக பேசி வருகிறோம். சென்னையை பிரிப்பது தொடர்பாக ஆலோசனை நடக்கிறது. அப்போது தான் கட்சியில் சில முக்கியமான நபர்களுக்கு பதவி கிடைக்கும். தலைமை இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஆனால் விரைவில் முடிவு எடுக்க உள்ளனர். கட்சியில் இருந்து மேலும் உறுப்பினர்கள் வெளியாவதை இது தடுக்கும், என்று மூத்த திமுக நிர்வாகி ஒருவரும் கூறியுள்ளார்.
எல்லாம் எளிமை
அதேபோல் இப்படி சென்னையை 7 ஆக பிரிப்பதன் மூலம், கட்சியின் நிர்வாக பணிகளை எளிதாக செய்ய முடியும். அதிக தொண்டர்களை சேர்க்க முடியும் . எளிதாக தொகுதிகள், தேர்தல் பணிகளை செய்ய முடியும். கோவையில் தற்போது திமுகவிற்கு 5 மாவட்ட பிரிவுகள் உள்ளது. அங்கு ஒரு பிரிவுக்கு 2 சட்டமன்ற தொகுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மொத்தம்
சென்னையில் மொத்தம் 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதை 4 நிர்வாக மாவட்டங்களாக பிரித்து தற்போது திமுக நிர்வகித்து வருகிறது. தற்போது இதன் மாவட்ட செயலாளர்களாக முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியம், எஸ் சுதர்சனம், பிகே சேகர் பாபு, என் சிற்றரசு ஆகியோர் உள்ளனர். விரைவில் இவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் புதிய மாவட்ட பிரிவுகள் உருவாக்கப்பட்டு, புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறீர்கள்.