திமுக முன்வைக்கும் தொகுதி பங்கீடு பார்முலா- கூட்டணி கட்சிகளுக்கு கிடைக்கப் போகும் இடங்கள் இவைதானாம்!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை தமிழ்நாட்டில் திமுக கூட்டணி தொடங்க உள்ளது. திமுக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் குழுக்களை அறிவித்ததைத் தொடர்ந்து இப்பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் தொடங்கும் என தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. "இந்தியா" கூட்டணி கட்சிகளிடையே பல மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு சில மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் எதிரும் புதிருமாக களத்தில் சந்திக்கும் நிலைமையும் உள்ளது.

காங். திமுக குழுக்கள் அறிவிப்பு: இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் "இந்தியா" கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழு நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் காங்கிரஸின் 30க்கும் மேற்பட்ட சீனியர் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று திமுகவும் 3 தேர்தல் குழுக்களை அறிவித்துள்ளன. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு ஆகியவற்றை திமுக தலைமை இன்று அறிவித்துள்ளது. இந்தக் குழுவில் திமுக சீனியர்கள், ஜூனியர்கள் என பலரும் இடம் பெற்றிருக்கின்றனர்.
திமுக கூட்டணி: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொமதேக, முஸ்லிம் லீக் ஆகியவை இடம் பெற்றிருந்தன. தற்போது இந்திய ஜனநாயகக் கட்சி இக்கூட்டணியில் இடம் பெறவில்லை.
2019-ல் தொகுதி பங்கீடு: 2019-ம் ஆண்டு திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவரம்: (மொத்தம் 39 தொகுதிகள்) திமுக -20; காங்கிரஸ்- 9; சிபிஐ- 2; சிபிஎம் -2; விசிக- 2; முஸ்லிம் லீக்-1; இந்திய ஜனநாயக கட்சி-1; கொமதேக- 1; மதிமுக-1. 2019 தேர்தலில் திமுக கூட்டணி வென்ற இடங்கள் : 38. திமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொமதேக, மதிமுக ஆகியவை போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் வென்றன. காங்கிரஸ் 9 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களைக் கைப்பற்றியது.
2019 பார்முலாதானாம்: 2024 லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டுக்கும் இதே பார்முலாவைத்தான் திமுக முன்வைக்க விரும்புகிறதாம். தற்போது இந்திய ஜனநாயகக் கட்சி திமுக கூட்டணியில் இல்லாத நிலையில் திமுக 21 இடங்களிலும் இதர கட்சிகளுக்கு 2019 தேர்தலில் ஒதுக்கிய அதே இடங்களையும் ஒதுக்கி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை சுமூகமாக முடித்துக் கொள்ள திமுக விரும்புகிறதாம்.
பாமக, மநீம வந்தால் என்னவாகும்?: அதேநேரத்தில் திமுக கூட்டணியில் பாமக, கமல்ஹாசனிம் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆகியவையும் இடம் பெறும் நிலையில் தொகுதி பங்கீடு, தொகுதிகளில் மாற்றங்கள் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றால் அக்கட்சிக்கு குறைந்தது 5 இடங்களாவது திமுக கொடுக்க வேண்டும். அதனால் காங்கிரஸுக்கான தொகுதிகளை சரிபாதியாக குறைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. இதை காங்கிரஸ் ஏற்குமா? என்பது தெரியவில்லை. அதேபோல கமல்ஹாசனின் மநீமவுக்கு 1 தொகுதியை திமுக ஒதுக்க முன்வருகிறது. ஆனால் கோவை தொகுதியை கமல்ஹாசன் தரப்பு கேட்கிறது. அதனை இடதுசாரிகள் விட்டுத்தர சாத்தியமில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் பாமக, திமுக கூட்டணியில் இடம் பெற்றால் விசிக என்ன முடிவெடுக்கும் என்கிற கேள்வியும் எழும். ஏனெனில் பாமக இடம் பெறும் கூட்டணியில் விசிக இடம் பெறாது என்பது அக்கட்சியின் நிலைப்பாடு. ஆகையால் தற்போதைய நிலையில் திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் சிக்கல் இல்லாமல் இருந்தாலும் பாமக, மநீம உள்ளே வந்தால் பிரளயம் வெடிக்குமா? என்கிற கேள்வியை மூத்த பத்திரிகையாளர்கள் முன்வைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications