மோடி அல்லாத பாஜக அரசுக்கு திமுக ஆதரவு தரும்? பரபர சந்திப்புகள் சொல்வது என்ன?
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் 23-ந் தேதி வெளியாக உள்ள நிலையில் மத்தியில் எந்த அரசுக்கு ஆதரவு என்பது தொடர்பாக திமுக தரப்பு படுதீவிரமாக ஆலோசனைகளை நடத்தி வருகிறது. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தால் மோடி அல்லாத ஒருவர் பிரதமராக திமுக ஆதரவு அளிக்கக் கூடும் என்றே கூறப்படுகிறது.
பாஜகவை தீண்டத்தகாத ஒரு அரசியல் கட்சியாகத்தான் 1980கள் இறுதிவரை அனைத்து கட்சிகளும் ஒதுக்கி வைத்திருந்தன. போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை அம்பலப்படுத்தியதிலும் அதன் பின்னர் தேசிய முன்னணி ஆட்சி அமைத்ததிலும் பாஜக திரைமறைவில் பங்கு வகித்தது. இதனால் திமுக, தெலுங்குதேசம், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்ற கூட்டணி அரசுக்கு பாஜகவின் ஆதரவையும் பெற்றுக் கொண்டன.
ஆனால் மண்டல் கமிஷனை முன்வைத்தும் ராமர் கோவில் பிரச்சனையை கையில் எடுத்தும் பாஜக ஆடிய ருத்ரதாண்டவம் வி.பி.சிங். அரசை கவிழ்த்தது. இதனால் பாஜக மீது மாநில கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்தன. அதுவரை பாஜகவின் முகமாக அத்வானி இருந்துவந்தார்.

வாஜ்பாய்க்கு ஆதரவு
1996-க்குப் பின்னர் பாஜகவின் மென்மை முகமான வாஜ்பாய் முன்னிறுத்தப்பட மாநில கட்சிகள் அக்கட்சியை தோளில் சுமந்தன. இதனால் விஸ்வரூப வளர்ச்சி அடைந்த அக்கட்சி 2014 லோக்சபா தேர்தலில் ‘வளர்ச்சி'யின் நாயகன் மோடியை பிரதமராக்கியது. பிரதமர் மோடி மெல்ல மெல்ல தம்முடைய குருநாதர் ‘அத்வானி'யின் முழுமையான இந்துத்துவா முகத்தை வெளிப்படுத்தியதால் அனைத்து தரப்பினரும் கடும் அதிருப்தி அடைந்தனர்.

மோடிக்கு வாய்ப்பு இல்லை
பாஜகவிலும் மோடிக்கு எதிராக ஒரு அணி வலிமையாக உருவெடுத்து நிற்கிறது. தற்போதைய லோக்சபா தேர்தலில் மோடியே மீண்டும் பிரதமர் என முன்னிறுத்தப்பட்டாலும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ், நிச்சயம் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்காது என்றே கூறப்படுகிறது. மோடியை அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்த நிலையில் மீண்டும் அவர் பிரதமராக மாநில கட்சிகள் ஆதரவு கிடைக்காது. அதனால் மோடிக்கு மாற்றாக நிதின் கட்காரி போன்ற மென்மை முகங்களை தேர்தல் முடிவுகளுக்குப் பின் பாஜக முன்னிறுத்தலாம்.

ஊசலாட்ட திமுக
இந்நிலையில் மோடியை மிக கடுமையாக விமர்சித்து வரும் திமுக தலைமை தற்போது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியிருக்கிறது. ஆனால் ஒருவேளை பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தால் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது தொடர்பாக படுதீவிரமாக விவாதித்து வருகிறது.

அம்பலப்படுத்திய தமிழிசை
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் சென்னை வருகையும் திமுக மூத்த தலைவர் துரைமுருகனின் சந்திரபாபு நாயுடு சந்திப்பும் இதை வெளிப்படுத்துகின்றன. இதன் உச்சமாக பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார் என தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பகிரங்கமாகவே பேட்டி அளித்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இன்னொரு பாஜக மென்மை முகத்துக்கு ஆதரவு?
இதற்கு பதிலளித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையிலும் கூட மோடி என்கிற தனிநபரைத்தான் கடுமையாக சாடியிருக்கிறாரே தவிர ஒரு இடத்திலும் பாஜக ஆட்சி அமைத்தால் ஒருபோதும் ஆதரவு தரமாட்டோம் என்கிற திட்டவட்டமான அறிவிப்பு இல்லை. அதனால்தான் மோடி அல்லாத வாஜ்பாய் போன்ற ஒரு மென்மை முகத்தை பாஜக முன்னிறுத்தலாம் திமுக நிச்சயம் ஆதரிக்கக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications