புதிய மத்திய அரசுடன் கை கோர்த்து எடப்பாடி அரசை கலைக்கும் 'பூமராங்' விளையாட்டில் இறங்குமா திமுக?
Recommended Video
சென்னை: மத்தியில் அமையும் புதிய அரசுடன் இணைந்து தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசை கலைக்க திமுக திட்டமிட்டால் அக்கட்சிக்குத்தான் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
முதல்வர் நாற்காலியில் பெரும்பான்மை பலம் இல்லாமல்தான் அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் முதல்வர் பதவி ஏற்ற போது திமுக நிச்சயம் ஆட்சியை கலைக்க ஆடுபுலி ஆட்டம் ஆடும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது என்பது உண்மைதான்.
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக் கொண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. தற்போதைய லோக்சபா மற்றும் இடைத்தேர்தல்கள் முடிவுகள் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் அளிக்கப் போகும் மதிப்பெண்களாகத்தான் இருக்கும்.
அதே நேரத்தில் திமுக முகாமோ, மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் அதன் உதவியுடன் எடப்பாடி தலைமையிலான அரசை வீட்டுக்கு அனுப்பலாம் என்கிற திட்டத்துடன் இருக்கிறது. ஏனெனில் ஆட்சியை இன்னமுமா கலைக்கவில்லை என்று மக்கள் கேட்பதாக திமுக இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறது.
நிதின் கட்காரி பிரதமராக திமுக ஆதரவு? க்ரீன் சிக்னல் கொடுத்தது அறிவாலயம்?
மத்தியில் தங்களுக்கு சாதகமான அரசு அமைந்துமா ஆட்சியைக் கலைக்கவில்லை என இனி மக்கள் கேட்பாளர்களே என்றும் திமுகவாகவே நினைத்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை திமுக, தற்போதைய எடப்பாடி அரசை கவிழ்க்க துணை போனால் வரலாறு 1980களை நோக்கி திரும்பும் என்பதில் சந்தேகம் இருக்காது.
1980ல் மக்கள் பேராதரவுடன் எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தார். இந்திரா காந்தியுடன் கூட்டு சேர்ந்து அந்த அரசை கருணாநிதி கலைக்க வைத்தார். ஆனால் தமிழக மக்கள் கருணாநிதியின் இந்த முடிவை ஏற்கவில்லை. மீண்டும் நடைபெற்ற தேர்தலில் எம்.ஜி.ஆரையே மீண்டும் அமோக வெற்றி பெற வைத்தனர். இதே வரலாற்றை ஸ்டாலினும் உருவாக்கிவிடக் கூடாது என்பது திமுக மூத்தவர்களின் கணக்கு.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக 'எடுப்பார் கைப்பிள்ளை'யாக தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆட்சி கலைப்பு போன்ற அஸ்திரங்களை ஏவி அதிமுக மீது மிகப் பெரும் அனுதாபத்தை திமுகவே ஏற்படுத்தி தந்துவிடக் கூடாது; அதனால் திமுக தலைமை மிக நிதானமாகவே செயல்பட வேண்டும் என்பது திமுக மூத்தவர்களின் அறிவுரை. அப்படி செயல்படாமல் ஆனால் பூமராங் போல திமுகவுக்குதான் பேரழிவு என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.