ஆட்சியில் பங்கு.. மாணிக்கம் தாகூர் சொன்னது அவருடைய சொந்த கருத்து.. செல்வப்பெருந்தகை விளக்கம்!
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தேவையான இடங்களை நாகரிகமாக கேட்டு பெறுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அதிகாரப் பகிர்வு தொடர்பாக சொன்ன கருத்து அவரின் சொந்த கருத்து என்று கூறிய செல்வப்பெருந்தகை, திமுக தவிர வேறு யாரிடமும் கூட்டணி பற்றி பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு நடந்த பின், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர், தொடர்ச்சியாக அதிகாரப் பகிர்வு தொடர்பாக பேசி வருகிறார்.

இது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பாக போராட வடிவமைப்பு காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருக்கிறது.
ஜனவரி 11ல் உண்ணாவிரப் போராட்டம், ஜனவரி 30ல் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்த உள்ளோம். ஜனவரி 31 முதல் பிப்.6 வரை மத்திய அரசை கண்டித்து மறியல் ஆர்ப்பாட்டம், பின்னர் பெருந்திரள் மக்கள் போராட்டம், பிப்.16 முதல் 25 வரை மண்டல அளவிலான கோரிக்கை பேரணிகள் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தை தொடர்ந்து தேர்தல் பரப்புரை மாநாடுகளும் நடத்தப்படும்.
அதேபோல் சட்டசபைத் தொகுதிக்கு ஆயிரம் பேர் வீதம் தேர்தல் போர் வீரர்களை உருவாக்கி இருக்கிறோம். மீனவர்கள், நெசவாளர்கள் மாநாடு நடத்த உள்ளோம். இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதற்கான தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும்.
தொடர்ந்து, மாணிக்கம் தாகூர் சொன்னது அவருடைய கருத்து. என்னை பொறுத்தவரை தமிழக காங்கிரஸ் தலைமை தெளிவாக இருக்கிறது. நாங்கள் திமுகவை தவிர வேறு எந்தக் கட்சியுடன் கூட்டணி பேசவில்லை. அதிகாரப் பகிர்வை வேண்டாம் என்று எந்தக் கட்சியும் சொல்லாது என்றுதான் கிரிஷ் சோடங்கர் கூறினார். கூட்டணி பற்றி காங்கிரஸ் தலைமை மற்றும் முதல்வர் ஸ்டாலின் இணைந்து எடுப்பார்கள்.
இந்தியா கூட்டணி மிகவும் வலிமையாக இருக்கிறது. மாணிக்கம் தாகூர் பொதுவெளியில் பேசுவதை தவிர்த்திருக்கலாம். எங்கள் கூட்டணி கட்சிகளிடம் நாகரிகமாக இடங்களை கேட்டு, நாகரிகமாக பெறுவோம். காங்கிரஸ் கட்சியினர் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள். காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அந்த முடிவுக்கு கட்டுப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications