356-வது பிரிவின் கீழ் ஆட்சியை கலைத்தால் திமுக மீண்டும் வெல்லும்- நாதக ஆதரவு? சீமான் செம்ம பல்டி!
சென்னை: இந்தியை திணிக்கும் மத்திய பாஜக அரசுக்கு வரி செலுத்த முடியாது என தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு அறிவித்தால் அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியை டிஸ்மிஸ் செய்தால் செய்யட்டும்; மீண்டும் நடைபெறும் சட்டசபை தேர்தலில் திமுகதான் வெல்லும்; மானத் தமிழர்கள் நிச்சயம் திமுகவுக்குதான் வாக்களிப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 356-வது பிரிவை பயன்படுத்தி திமுக ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடைபெற்றால் திமுகவை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கக் கூடும் என்பதாகவே சீமானின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் கட்சிகள், அரசுகள் அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியைக் கலைப்போம் என பூச்சாண்டி காட்டுவார்கள். இந்த பூச்சாண்டிக்குதான் நாம் பயப்படக் கூடாது.

மக்களுக்காக நின்றால் திமுக வெல்லும்
356-வது பிரிவின் கீழ் திமுக ஆட்சியைக் கலைத்துவிடு.. மக்களுக்காக சண்டை போட்டு.. நிதியை தர முடியாதுன்னு மத்திய அரசு சொன்னதால் நாம் நம் வரி வருவாயை தர முடியாது என சொன்னோம்.. ஆட்சியை கலைத்தார்கள்.. சரி மீண்டும் சட்டசபை தேர்தல் வரும்தானே.. அப்போது யார் வெல்வார்கள்? மக்களுக்காக நிற்கிற கட்சி எதுவோ வெல்லும். இந்த இடத்தில்தான் நாம் சமரசம் செய்யக் கூடாது.
பறிபோன உரிமைகள்
ஆட்சி கலைப்பு அஞ்சியதால்தான் காவிரி நதிநீர் உரிமை போனது; கச்சத்தீவு பறி போனது; மாநிலப் பட்டியலில் இருந்து கல்வி, பொதுப் பட்டியலுக்குப் போனது.
மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதா?
மத்திய அரசு என்னதான் செய்ய முடியும்? ஆட்சியைக் கலைத்தால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதா? சொல்லுங்க ஆட்சிக்கு மீண்டும் வர முடியாதா? இப்படித்தான் 2009-ல் தமிழினத்தை கொலை செய்த போது பதவிக்கு பயந்து உட்கார்ந்திருந்தோம்.. சிங்களவன் லட்சக்கணக்கில் ஈழத் தமிழரை கொன்று குவித்தான்.
ஆட்சியை கலைத்தால் திமுகதான் வெல்லும்
மத்திய அரசை போய்யா.. என்று சொல்லிவிட்டு ஆட்சியை இழந்து மீண்டும் தேர்தலை சந்தித்தால் மக்கள் மறுபடியும் உங்களைத்தான் தேர்வு செய்வான். அப்படி செய்யாமல் இருக்க மானம் கெட்ட, உணர்வு கெட்ட, அறிவு கெட்டவன் தமிழன் அல்ல. தன்மானம் மிக்க ஒரு இனம். அப்படி திமுகவின் ஆட்சியை கலைத்துவிட்டால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது. அந்த இடத்தில்தான் திமிராக நிற்க வேண்டும். ஆட்சியை கலைத்துவிடு பார்ப்போம் என சொல்ல வேண்டும்.
யார் பிரிவினைவாதி?
தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதே பாஜகவும் காங்கிரஸும்தான். இது எங்கள் நிலம். தமிழர் நிலம். நாங்கள் யாருக்கு தேசத்துரோகிகள்? இது என்ன இந்தி பேசுகிறவன் நாடா? எவனை கேட்டு இந்தி திணிப்பை நடத்துகிறீர்கள்? பல மொழி பேசுகிற மக்களின் தேசம் இது.. ஒரு 4 மாநிலத்தில் பேசப்படுகிறதா இந்தி மொழி? என் வரியை வைத்துக் கொண்டு தரவே முடியாது என்பது பிரிவினையை தூண்டுகிறதா? தேசப்பற்றை உருவாக்குகிறதா? யார் பிரிவினையை தூண்டுவது? இந்தியாவின் அதிக வருவாய் தருவதில் 2-வது பெரிய மாநிலம் என் தமிழ்நாடு. என் நிதியை வைத்துக் கொண்டு தர மறுக்கும் நீதிதான் தேச ஒருமைப்பாட்டை சிதைப்பது? இவ்வாறு சீமான் கூறினார்.
ஆட்சியை கலைத்தால் திமுகவுக்கு ஆதரவு
வரி தர மறுத்து திமுக ஆட்சிக் கலைக்கப்பட்டால், மீண்டும் நடைபெறக் கூடிய தேர்தலில் மானத் தமிழர்கள் நிச்சயம் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என சீமான் கூறியிருப்பதன் மூலம் அப்படியான ஒரு தேர்தலில் திமுகவுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தரக் கூடும் என்பதையே வெளிப்படுத்துகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications