2026 தேர்தலுக்கு எஸ்.வி.சேகரை பயன்படுத்தினால் போதும்.. துணிச்சலுடன் விமர்சிப்பவர்.. ஸ்டாலின் பேச்சு!
சென்னை: சென்னையில் நடிகர் எஸ்.வி.சேகரின் நாடகப்பிரியா குழுவின் 50வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடகப்பிரியா அமைப்பின் நிறுவனத்தலைவர் எஸ்.வி.வெங்கட்ராமனின் நூற்றாண்டு விழா, எஸ்.வி.சேகரின் நாடக விழாவில் பங்கெடுத்து உரையாற்றக் கூடிய வாய்ப்பை பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். அவர் பேசும் போது நம் முதலமைச்சர் என்று கூறினார். அதனால் நானும் நம் சேகர் என்று சொல்கிறேன்.
எஸ்.வி.சேகர் சில மாதங்களுக்கு முன் அண்ணா அறிவாலயயத்திற்கு வந்தார்கள். அப்போது என்னிடம் ஒரு கோரிக்கையை வைத்தார். அந்த கோரிக்கையை என்னால் தவிர்க்க முடியவில்லை. அதற்காக தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். ஏனென்றால் எஸ்.வி.சேகர் எங்கிருந்தாலும், எந்த கட்சியில் இருந்தாலும், இப்போது எந்த கட்சி என்று தெரியாது.. நம்ம கட்சி.. ஏனென்றால் முன்னாள் முதலமைச்சர் சொல்வார்..

நான் என்றால் உதடு ஒட்டாது.. நாம் என்றால் தான் உதடுகள் ஒட்டும். அதனால்தான் இன்றைக்கு நானும் மகிழ்ச்சியோடு வந்துள்ளேன். எஸ்.வி.சேகர் தன் தந்தையை போலவே கலைச் சேவையாற்றியவர். இதுவரை 25 நாடகங்களை எழுதி, ஏழாயிரம் முறை அரங்கேற்றி இருக்கிறார். இதற்கு முன் 3,500வது நாடக விழாவையும், 5,600வது நாடக விழாவிலும் கருணாநிதி கலந்து கொண்டிருக்கிறார். அவர் மீது எப்போது எஸ்.வி.சேகர் பாசம் கொண்டவர்.
அது அரசியல் அல்ல. கலைப் பாசம். அதுதான் மிகவும் முக்கியம். இந்த கலைப் பாசம் காலத்தால் அழியாது. அவரும் எங்கள் கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். அவர் அதிமுக எம்எல்ஏ-வாக இருந்த போது கூட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் மனுவை கொண்டு வந்து வழங்கும் போது அதனை புன்சிரிப்புடன் வாங்கி கொண்டு அதனை உடனே உதவியாளர் மூலம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடுவார்.
கட்சிகள் மாறும் போது, கொடிகளின் நிறம் மாறலாம். ஆனால் மனிதருடைய நிறங்கள் மாறக் கூடாது. அதற்கு நம் எஸ்.வி.சேகரை எடுத்துக்காட்டாக சொல்லலாம். ஏனென்றால், எந்த பிரச்சனையாக இருந்தாலும், எந்தக் கட்சியில் இருந்தாலும், எதையும் துணிச்சலாக சொல்லக் கூடியவர். அந்த ஆற்றல் அவருக்கு உண்டு. இப்போது கூட யாரை பற்றியெல்லாம் சொல்லி கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். நாடகத்தில் சில காட்சிகளை பார்த்தோம்.
2026 தேர்தலுக்கு இவற்றை பயன்படுத்தி கொண்டாலே போதும். நமக்கு வேறு எதுவும் தேவையில்லை. அவர் பேசும் போது கோரிக்கை ஒன்றை வைத்தார். அவர் தந்தை வாழ்ந்த மயிலாப்பூர் பகுதியில் உள்ள தெருவிற்கு தந்தை பெயரை வைக்க வேண்டும் என்பது தான். நிச்சயம் விரைவில் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, அந்த தெருவிற்கு பெயர் சூட்டப்படும். என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications