அம்மா உணவகத்தில் திமுக மகளிர் அணியினருக்கு பணி? - சென்னை மேயர் பிரியா சொன்ன பதில்!
சென்னை : சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநகராட்சிக் கூட்டத்தின் நேரமில்லா நேரத்தில் வார்டு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மேயர் பிரியா பதிலளித்தார்.
அம்மா உணவகங்களில் திமுக மகளிர் அணியினரை பணியமர்த்த வேண்டும் என திமுக கவுன்சிலர் ஒருவர் கோரிக்கை வைக்க, அதற்கு மேயர் பிரியா பதிலளித்துப் பேசினார்.
மகளிர் சுய உதவிக் குழு மூலமாகவே அம்மா உணவகத்தில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். வார்டு கவுன்சிலர்கள் உரிய நபர்களை பரிந்துரைத்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இன்றைய கூட்டத்தில், இதுவரை சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு 2% தனி வட்டி விதிப்பு தளர்வு உள்ளிட்ட 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த முரளிதர்- சென்னை சட்டக் கல்லூரியில் பயின்றவர்
சென்னை மாநகராட்சி கூட்டம்
சென்னை மாநகராட்சிக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாமன்ற கூட்டம் தொடங்கியதும் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், புதுமைப் பெண் திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேயர் பிரியா நன்றி தெரிவித்தார். இந்தக் கூடத்தில் 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
97 தீர்மானங்கள்
மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மையங்களுக்கு தேவையான 107 டாக்டர்களின் பணி ஒப்பந்த காலம் மேலும் 11 மாதம் நீட்டிக்க அனுமதி அளிக்கப்படும், சென்னையில் அனுமதிக்கு மாறாக கட்டிய 2.75 லட்சம் வீடுகளுக்கு கூடுதல் சொத்து வரி விதிக்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நேரமில்லா நேரம்
நேரமில்லா நேரத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். அப்போது பேசிய 98-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரியதர்ஷினி, 4வது வார்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளின் 10 சிப்பங்கள் ஒரு ஒப்பந்ததாரருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டதால் பணி மெத்தனமாக நடைபெற்று வருகிறது என்றார்.
அக்டோபர் 10க்குள் முடிவடையும்
அதற்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, "சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை வேகப்படுத்தி உள்ளோம். வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆணையர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால்களை பிரதான கால்வாய்க்கு இணைக்கும் பணி அக்டோபர் 10-க்குள் முடிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
அம்மா உணவகத்தில் திமுக மகளிர் அணி
102-வது மாமன்ற உறுப்பினர் ராணி ரவிச்சந்திரன் பேசுகையில், "கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்களே அம்மா உணவகத்தில் தற்போதும் பணிபுரிந்து வருகிறார்கள். எங்கள் வார்டு பகுதியில் உள்ள திமுக மகளிர் அணி நிர்வாகிகளை அம்மா உணவகத்தில் பணியமர்த்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
கவுன்சிலர்கள் பரிந்துரைக்கலாம்
அதற்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, "அம்மா உணவகத்தில் மகளிர் சுய உதவிக் குழு மூலமாகவே வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் உரிய நபர்களை பரிந்துரைத்தால் தகுந்த நடவடிக்கை எடுத்து அவர்கள் அம்மா உணவகத்தில் பணியமரத்தப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.
அரசு வாகனம்
மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், மண்டலக் குழு, நிலைக் குழு நியமனக்குழு மற்றும் வார்டு குழு தலைவருக்கு அரசின் அனுமதி பெற்ற வாகனம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இதனை வழிமொழிந்து பேசிய துணை மேயர் மகேஷ் குமார் இது தொடர்பாக அடுத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.