ஸ்ரீரங்கம்; பழனி; மயிலை; திருத்தணி;திருச்செந்தூர்; மதுரை.. கோயில் நகரங்களை தன்வசப்படுத்திய திமுக..!
சென்னை: திமுக இந்துகளுக்கு எதிரானது என தொடர்ந்து பரப்புரைகள் செய்யப்பட்ட போதிலும், தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில் நகரங்கள் அனைத்தையும் அக்கட்சி தன் வசப்படுத்தியுள்ளது.
மதத்தை அடிப்படையாக கொண்டு முன்வைக்கப்பட்ட பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதை இது உணர்த்துகிறது.
புதுச்சேரியில் முதல்வர் பதவிக்கு மல்லுக்கட்டும் பாஜக.., விட்டுத்தருவாரா ரங்கசாமி - கலாட்டா ஆரம்பம்
திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், மயிலாப்பூர், பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மதுரை மத்திய தொகுதி என முக்கிய கோயில்கள் உள்ளடங்கிய தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
வேல் யாத்திரை
இந்து கடவுள்களை திமுக அவமதிப்பதாக கூறி பாஜக சார்பில் 6 மாதங்களுக்கு முன்னர் வேல் யாத்திரை நடத்தப்பட்டது. முருகனின் அறுபடை வீடுகளை உள்ளடக்கியவாறு அந்த யாத்திரை பயணத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. வேல் யாத்திரை மூலம் தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கு அதிகரிக்கும் என கருதப்பட்ட நிலையில், கோயில் நகரங்களை உள்ளடக்கிய தொகுதிகள் அனைத்தும் திமுக வசம் சென்றிருக்கிறது.
கோயில் நகரங்கள்
அந்த வகையில் அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ள திருவண்ணாமலை மற்றும் முருகன் கோயில் அமைந்துள்ள திருத்தணி, திருச்செந்தூர், கும்பகோணம்(சுவாமிமலை), பழனி, உள்ளிட்ட நகரங்களில் திமுகவே வெற்றிபெற்றிருக்கிறது. இதேபோல் ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம், கபாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ள மயிலாப்பூர், மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ள மதுரை மத்திய தொகுதி, காஞ்சிபுரம், கும்பகோணம் என இந்துக்களின் ஆன்மிக தலங்கள் உள்ளடக்கிய தொகுதிகள் அனைத்திலும் திமுக அமோகமாக வென்றுள்ளது.
ரூ.1,000 கோடி நிதி
திமுகவின் இந்த வெற்றிக்கு அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சில வாக்குறுதிகளும் முக்கிய காரணமாக விளங்குகிறது. கோயில்கள் புனரமைப்புக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களிலெல்லாம் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்பதை திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.
வழிபாட்டு உணர்வு
மேலும், இந்து சமய மக்களின் வழிபாட்டு உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் காசி, ராமேஸ்வரம், கேதர்நாத், பூரி ஜெகந்நாதர் ஆலயம் உள்ளிட்ட முக்கிய ஆன்மிக தலங்களில் ஏதேனும் ஒன்றுக்கு சென்று வர ஆண்டுக்கு ஒரு முறை ரூ.25,000 நிதியுதவி அளிக்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.