வீரன் உள்பட 4 வகை பிராண்ட்களை விற்க வேண்டாம்! டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த உத்தரவு! மது பிரியர்கள் ஷாக்
சென்னை: மதுவில் 'ஆல்கஹால்' அளவு குறைவாக உள்ளதால் வீரன் உள்பட நான்கு வகை மதுபானங்களை விற்க வேண்டாம் எனவும் ஸ்டாக் இருந்தால் திருப்பி அனுப்புமாறும் 'டாஸ்மாக்' நிர்வாகம் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் இருந்து கடை ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசின் டாஸ்மாக் மூலம் மதுபான விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றன.

எனினும், அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்தும் மதுபானங்கள் பிளாக்கில் தொடர்ந்து விற்கப்படுவதாகவும், 18 வயதைக் கடக்காத சிறுவர்களுக்கும் மது விற்பனை செய்யப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் உள்ளன. அதேபோல டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் சில சரக்கில் வீரியம் இல்லை என்பதும் மதுபிரியர்களின் ஆதங்கமாக உள்ளது.
இன்னொரு பக்கம் டாஸ்மாக் கடைகளை மூடி பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. எனினும், மதுக்கடைகளை படிப்படியாக மூட திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம், டாஸ்மாக் கடைகளில் அவ்வப்போது புதிய வகை சரக்குகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வீரன் என்ற பெயரில் மதுபானம் விற்பனை செய்யப்படது.
சமூக வலைத்தளங்களில் பலரும் இதை ட்ரோல் செய்யவும் தொடங்கினர். இந்த நிலையில் தான், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் ட்ரோபிகானா வி.எஸ்.ஓ.பி. பிராந்தி, ஓல்டு சீக்ரெட் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி ஆகியவற்றை வாங்கி குடிக்கும் போது போதை ஏறுவதில்லை என்றும் எவ்வளவு மது அருந்தினாலும் 'சப்பென்று' இருப்பதாக மது பிரியர்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இந்த 3 வித மதுபானங்களின் தரத்தை ஆய்வு கூடத்தில் பரிசோதித்த போது, அதில் 3 வித மது பானத்திலும் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மதுவில் ஆல்கஹால் அளவு என்பது 42.84 % இருக்க வேண்டும். அதைவிட குறைவாகவோ, கூடுதலாகவோ இருந்தால் அதை கடைகளில் விற்கக் கூடாது.
இதனால், ஆல்கஹால் அளவு குறைவாக உள்ளதால், வீரன் ஸ்பெஷல் பிராந்தி (பேட்ச் எண் 082/2024) வி.எஸ்.ஓ.பி. ட்ரோபிகானா (பேட்ச் எண். 013/2020), ஓல்டு சீக்ரெட் பிராந்தி (பேட்ச் எண். 837/2018) ஆகியவை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் அவற்றை விற்பனை செய்ய வேண்டாம் என்று டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், இந்த வகை மதுபானங்கள் கடைகளில் இருப்பு இருந்தால் அதை மதுபான கிடங்குக்கு திரும்ப அனுப்புமாறு கடைக்காரர்களை டாஸ்மாக் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் இருந்து கடை ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறும் போது, "மது பிரண்ட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட ஆல்கஹால் குறைவாகவோ, கூடுதலாகவோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அந்த மது வகை விற்பனைக்கு தகுதியற்றதாக எடுத்துக் கொள்ளப்படும். மது வகைகளின் தரத்தை தெரிந்து கொள்ள அவ்வப்போது, மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்படும். தற்போது, 4 மது வகைகளின் குறிப்பிட்ட பேட்ச் எண் உடைய மது வகைகளில், ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதால், திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது " என்றார்.












Click it and Unblock the Notifications