எடப்பாடியில் பொங்கல் விழாவுக்கு வந்த பழனிசாமி.. திடீரென கமாண்டோக்களை விட்டுவிட்டு பைக்கில் பயணம்
சென்னை: முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பைக்கில் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது சொந்த ஊரான எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்திற்குச் சென்றார்.
அங்கு கோலாகலமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தயாராக இருந்தன. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான பழனிசாமி என்பவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் கிடைத்தது.

எடப்பாடி பழனிசாமி
இதனால் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பண்டிகையை கொண்டாடவில்லை. உடனே அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு இறந்த உறவினரின் வீட்டிற்கு அஞ்சலி செலுத்த சென்றுவிட்டார். அவரது உதவியாளர் ஸ்கூட்டியை இயக்க எடப்பாடி பழனிசாமி பின்னால் அமர்ந்து கொண்டு சென்றார்.

வைரல் வீடியோ
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிமுகவின் தலைமை யார் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 6 நாட்கள் இந்த வழக்கு நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் தரப்பினர் தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.

பொதுக் குழு வழக்கு
இதில் பொதுக் குழுவில் ஒரு தீர்மானமே இல்லாத நிலையில் ஓ பன்னீர் செல்வத்தை ஏன் நீக்கினீர்கள் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக விவாதங்கள் அனல்பறந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என்பதை எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் எதிர்நோக்கியுள்ளார்கள்.

தீர்ப்பு
இந்த வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்தால் அதிமுகவில் அணி தாவல்கள் நிறைய நடைபெற வாய்ப்புள்ளது. அது போல் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்தால் ஓபிஎஸ்ஸின் அரசியல் பயணம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும். ஒரு வேளை ஓபிஎஸ், டிடிவி தினகரனை போல் தனியாக ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்கி செயல்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications