வாகன ஓட்டிகளே உஷாராக இருங்க.. சென்னை காவல்துறை முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை பெருநகர காவல் ட்விட்டர் பக்கத்தில் முதல்முறையாக பதிவிடுவோர் கவனத்திற்கு.. இடம் மற்றும் நேரம் குறித்து தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞயிறுகளில் குடித்துவிட்டு சர்வ சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள். வாகனங்களில் வந்து தான் மது அருந்துவார்கள். அருந்துவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்வார்கள். அவர்கள் ஒருவேளை போலீசிடம் மாட்டினால் அன்று பெரிய அபராதம் தான்.

இதேபோல் ஹெல்மெட் போடாமல் பல இடங்களில் சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள். போலீஸ் இல்லையிலே யார் பிடிக்க போகிறார்கள் என்று பெரும்பாலும் ஹெல்மெட் போடுவது இல்லை. போக்குவரத்து போலீசார் சோதனை செய்யும் பகுதிகளில் மட்டும் தான் ஹெல்மெட்டுடன் சுற்றுவார்கள். மற்ற நேரங்களில கழட்டி பைக்கின் முன் பக்கத்தில் வைத்துக் கொள்வார்கள். இதுதான் கள எதார்த்தம்.
செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவார்கள். கார்களில் மறந்தும் சீட் பெல்ட் போட மாட்டார்கள்.அரை கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சிக்னல் இருந்தால், கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒருவழி பாதையில் சென்று அசால்ட்டாக அபாயகரமாக சாலையை கடந்து போகவேண்டிய இடத்துக்கு போவார்கள். சிக்னலில் போலீஸ் இல்லை என்றால் சுத்தமாக மதிக்காமல் அப்படியே ஏறி செல்வார்கள். இப்படித்தான் சில மாதம் முனபு வரை சென்னையில் இருந்தது. ஆனால் சென்னை போக்குவரத்து போலீசார் எடுத்த அதிரடி ஆக்சனால் மக்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு பயப்படும் நிலை வந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக ஆபத்தான டிரைவிங், சிக்னலை மதிக்காமல் சென்றது, சிக்னலில் கோட்டை தாண்டி நின்றவர்கள், படிக்கவே முடியாத அளவிற்கு நம்பர் பிளேட் வைத்துள்ளவர்கள், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், செல்போனில் பேசிய படி சென்றவர்கள் என சென்னையில் பலருக்கும் அபராதம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதெல்லாம் எப்படி நடந்தது என்றால், போக்குவரத்து போலீசாரின் சோதனையில் அல்ல.. பொதுமக்களின் சோதனையில் நடந்திருக்கிறது. பொதுமக்கள் தாங்கள் பார்க்கும் இடத்தில் போக்குவரத்து விதிமீறலில் யாரேனும் ஈடுபட்டிருப்பதை பார்த்தால் உடனே போட்டோ எடுத்து அல்லது வீடியோ எடுத்து சென்னை மாநகராட்சி போக்குவரத்து போலீசாரை ட்விட்டரில் டேக் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள்.

இதை பார்த்த பலரும் சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரை டேக் செய்து போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து புகார் அளித்து வருகிறார்கள்.அப்படி அளித்த பலருக்கும் சென்னை மாநகர போலீசார் பதில் அளித்து நடவடிக்கை எடுக்கிறார்கள். போலீஸ் தொடங்கி அரசியல்வாதிகள் வரை பலரும் சிக்கி இருக்கிறார்கள். நம்பர் பிளேட் தெரியும் வகையில் வாகனத்தின் புகைப்படம், புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் நேரத்தை சொனனால் போதும், சிசிடிவியை ஆராய்ந்து உடனே ஆக்சன் எடுக்கிறது சென்னை போலீஸ். போக்குவரத்து விதிமீறலுக்காக குறிப்பிட்ட நபருக்கு அபராதம் கட்ட சொல்லி அவரது செல்போனிற்கே நோட்டீஸ் பறக்கிறது. இதுவரை ஐந்தாயிரம் பேருக்கு பதில் அளித்து நடவடிக்கை எடுத்திருக்கிறது சென்னை போக்குவரத்து போலீஸ்.
இந்நிலையில் சென்னை போக்குவரத்து போலீசாரை டேக் செய்து தினமும் 50க்கும் மேற்பட்டவர்கள் புகார்கள் அளித்து வருகிறார்கள். அப்படி அளிக்கும்புகார்களில் நேரம், இடம் குறித்து தகவல்கள் இருப்பதில்லை. இதையடுத்து சென்னை பெருநகர காவல் ட்விட்டர் பக்கத்தில் முதல்முறையாக பதிவிடுவோர் இடம் மற்றும் நேரம் குறித்து தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். நம்பர் பிளேட், நேரம், நாள், இடம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு டேக் செய்தால் சிசிடிவி உதவியுடன் போலீசார் அபராதம் விதிப்பார்கள்.












Click it and Unblock the Notifications